Sunday, August 31, 2014

அரவிந்தன் சொக்கன், ராஜா சந்திரசேகர், சந்தோஷ்

அன்புள்ள ஜெ
கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்று சாத்தியமா, இல்லையென்றால் என்ன காரணம்? நன்மை தீமை அனைத்து காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது நாணயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டதா?. இந்த சூழல் தொடரும் பட்சத்தில் எதிர்கால அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நாணயமே இல்லா உலகமாக மாறிவிடுமா?. உங்கள் பார்வை…
அன்புடன்
அரவிந்த் சொக்கன்
கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்றும் உள்ளன. கேரளத்தில் ஒருமுறை பயணம் செய்யும்போது மலப்புரத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பாய் காசு வாங்கவில்லை, உண்டியல். திருவனந்தபுரத்தில் டாக்டர் திருமதி பை என்பவர் பில் கொடுப்பதில்லை, நன்கொடை மட்டுமே. கோவையில்கூட ஒரு ஓட்டல் உள்ளது
ஆனால் இவை இன்று சாத்தியமல்ல. இவை நிலப்பிரபுத்துவ அறங்கள். முதலாளித்துவ உலகம் இவற்றை ஆதரிக்காது. ஆனால் இந்த அறத்துக்கு முதலாளித்துவ மறுபதிப்பு ஒன்று உண்டு. அது உற்பத்தியில் நேர்மை என்று சொல்லலாம்.
ஜெ
அன்புள்ள ஜெ
தங்கள் மத்துறு தயிர் படித்தேன்.கம்பனை மட்டுமல்ல தற்காலக் கதைகளை வாசிக்கவும் நல்ல குரு தேவைப் படுகிறார்.நீங்கள் நல்ல குரு
தேவாரத்திலும் மத்தார் தயிராகச் சிந்தையை உருவகித்திருக்கின்றார் அப்பர் (நான்காம் திருமுறை)
பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே 4திருமுறை 52 பதிகம் 9பாடல்
.
பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 4திருமுறை 96 பதிகம் 3 பாடல்
மன நல மருத்துவனான என் பார்வையில் கதையில் ராஜத்தைக் குறித்த பேராசிரியரின் குற்ற உணர்வும் ஒரு அடி நாதமாக விளங்குகிறது என நினைக்கிறேன்.பேராசிரியர் கண்ட கனவு சற்று சுவாரசியமானது.ராஜம் குறித்த அவரது நிறைவேறா ஆசை கனவில் நிறைவடைகிறது.அதே நேரம் தன் குரு போல் தான் இல்லையோ என்ற குற்ற உணர்ச்சிதான் குமாரப்பிள்ளையின் பேரை விட்டு விட்டீர்களே என்று சொல்ல வைக்கிறது.நல்ல கலைஞனுக்குத் தான் செய்யாமல் விட்ட செயல்களைப் பற்றிய ஒரு குற்ற உணர்வு அதிகமாக இருக்கும்.
இது போல் பல் வேறு வாசிப்புச் சாத்தியங்க்களை வழங்குகிறது பிரதி
அவரவர் மனதில் அவரவர் மத்து!!
அன்புடன்
ராமானுஜம்
சோற்றுக்கணக்கு-உணர்வில் படியும் ருசி
சோற்றுக்கணக்கு -உணர்வுகளை நுட்பமாய் நெய்யும் கதை.
கெத்தேல் சாகிப்,இன்ஷா அல்லா.இவரும் ஒரு கடவுளைப்போலத்தான்.
கதைசொல்லியின் துயரங்களும் அவன் பயணத்தில் கண்டடையும்
கெத்தேல் சாகிப்பும் அவரின் அக புற உலகங்களும் பல ரஸவாதங்களாய்
நம்மைத் தொட்டுக்கொண்டே செல்கின்றன.எங்கும் தீர்ந்துபோகாத கதை
கெத்தேல் சாகிப் போலவே நமக்கு நிறைய பரிமாறிச் செல்கிறது.
#மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’
#நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும்,
சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என விரியும் வரிகளும்
வாழ்வின் வார்ப்பில் வெளிப்படும் மனித பகுப்புகளும் கதையின் தீவிரத்தை அதன்
கட்டமைப்போடு எடுத்துச் செல்கின்றன.
கதையின் ருசி மனதில் தங்கிபோகிறது,கெத்தேல் சாகிப்பின் மீன் ருசியைப்போல.
அன்புடன்
ராஜா சந்திரசேகர்
அன்புள்ள ஜெயமோகன்;
வணக்கம்,நலமறிய ஆவல்.
சோற்றுக்கனக்கு சிறுகதை குறித்து திரு. ராஜகோபாலன் அவர்கள் எழுதிருந்த கடிதம் படித்தேன்.
வாசகனையும் எழுத்தாளனாக்கும் வல்லமை எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. இந்த இரண்டு சிறுகதைகளையும் ஒரே மூச்சில் நெட் சென்டரில் வாசித்தேன். கண்களிருந்து கண்ணீர் ஒழுகிய வண்ணம் இருந்தது.
அந்த நெட் சென்டரை நடத்துபவர் அதிர்ச்சியுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உங்கள் எழுத்தை படிப்பதை விடவும் சிறந்த அனுபவம் இந்த பிறப்பில் எனக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
அன்புடன்
சந்தோஷ்

No comments:

Post a Comment