Sunday, August 31, 2014

சுரேந்திரன், செந்தில்குமார்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நூறு நாற்காலிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் விலகமுடியாத வலியோடு எழுதுகிறேன். ஒரு எழுத்தின் மூலமாக இத்தனை வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இன்றுதான் உணர்கிறேன். கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து சமூகத்தில் ஒரு சக்தி மிகுந்த ஆளாக நகரத்தில் வாழ்ந்து வரும் ஆதிக்க சாதி மனிதர்களும், கிராமத்தில் வாழும் பெற்றோர்களால் நீங்கள் குறிப்பிட்ட சில சங்கடங்களை சந்தித்தே வருகின்றனர். ஆனால் “நூறு நாற்காலிகள்” வரும் “காப்பன்” நிலை மனிதனாக பிறந்த எவருக்குமே வரவேகூடாத அனுபவங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தில் உயர்ந்தாலும் அவர்கள் அதிகாரம் செல்லாது என்பதை ஒவ்வொரு வரியிலும் தெளிவாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதை போல ஒரு நாற்காலி என்பது நூறு நாற்காலிகள் என்று ஆகும்போது நிச்சயம் நல்ல மாற்றம்வரும்.
என்றும் அன்புடன்,
கிருஷ்ணகுமார்
சவுதி அரேபியா
அன்புள்ள ஜெமோ,
சமூக விளிம்புநிலை மனிதனின் கதை என்று புறவயமாக ஆரம்பித்த ‘நூறுநாற்காலிகள்’, முடியும்போது நம்மைப் பற்றியதாக, சட்டென்று உருமாறி, அகவயமாக ஆழமாய்ப் பாய்ந்தது.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனக்கிலேசங்களை, நாம் தப்பியோடி மேலும் புனிதமாக்கும் ஆழ்மன வடுக்களை, தாட்சண்யமின்றி மீண்டும் மீண்டும் நேராய் எதிர்கொள்வதே அதிலிருந்து மீண்டு ‘அமர்வதற்கான’ வழி என்று காட்டிய அற்புதப் படைப்பு ‘நூறுநாற்காலிகள்’.
நன்றி,
வெங்கடாசலம் சண்முகம்.
மனதை அழுத்தி வைத்திருந்த பல விஷயங்களை சமீபத்தை கதைகளில் ‘vent ‘ செய்த பிறகு உங்கள் மனம் இப்போது லேசாகி விட்டதா? அது என்ன உங்கள் புனைவுகளில் மனித இழிவைக் காட்டப் புழுக்களை அடிக்கடிப் பயன் படுத்துகிறீர்கள்? விஷ்ணுபுரத்தில் ‘மாமிசத் துண்டில் அடர்ந்த புழுக்கள் போல மனிதர்கள்’, யானை டாக்டர் கைகளின் மேல் புழுக்கள், காப்பான் உறவினர்கள் செல்லும் வழியெங்கும் புழுக்கள்… நீங்கள் என்ன பட்டினத்தாரா?
உண்மையில், ஏழாவது உலகம் படித்து ஒரு மூன்று மாதங்களாவது என் நாசியில் துர்நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு யானை டாக்டர் படித்தபின் என் கைகளை இரண்டு முறையாவது கிருமி நாசினி சோப்பால் கழுவிக் கொண்டேன். இப்போது நூறு நாற்காலிகளுக்குப் பின் சோறே உள்ளே இறங்கவில்லை. ஒரே உக்கிரம். பதினைந்தாண்டுகளுக்கு முன்னிருந்த என் இளமையின் வறுமையிலும் கூட, இத்தனை சாக்கடைகளையும் அந்த மனிதர்களையும் பார்க்காமலேதான் கடந்து வந்திருக்கிறேன் என நினைக்கும்போது குற்ற உணர்ச்சிதான் மேலிடுகிறது.
நன்றி — பாஸ்கி
அன்புள்ள பாஸ்கி
உங்களுடைய எதிர்வினையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் யானைடாக்டர் உடபட இக்கதைகள் உருவாக்க எண்ணுவது, கதையை உள் நுழைந்து உணர்ந்தால் உருவாகக்கூடியது , அதற்கு நேர் எதிரான மனநிலைதான். நம்மை வெளியே நிறுத்திக்கொண்டால்தான், அவ்வனுபவங்களை பிறர் அனுபவங்களாக எண்ணினால்தான் டெட்டால் போட்டு கை கழுவும் உணர்வு ஏற்படும். எனக்கு அவ்வாழ்க்கைக்குள் நான் சென்ற உணர்வுதான். புழுவை ஒரு மிக நெருங்கி நோக்கும் உணர்வுதான் இருந்தது. வாசிப்பில் அது உருவாகவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களுக்கு “நூறு நாற்காலிகள்” பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு…. கதையை படித்த பிறகு அதன் தாக்கத்தை விட்டு சற்றே (இன்னமும் முழுமையாக இல்லை !!) வெளியே வந்த பிறகு “என்ன பெரிசாய் எழுதிடப் போறோம் ?” என்ற தயக்கம்… உங்களுக்கு வந்த சில கடிதங்களைப் படித்தப் பிறகு, கண்ணை துடைத்துக்கொண்டும் மூக்கை உறிஞ்சிக்கொண்டும் நாம் மட்டும் படிக்கவில்லை என்ற ஞானம் … மனதில் தோன்றும் நன்றி உணர்வை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற மீண்டும் ஒரு தீர்மானம் …. இதோ உட்கார்ந்து விட்டேன்….!!
நான் படித்தது மிகவும் சொற்பம்….!! 37 வயது ஆனாலும் – படித்து ரசித்த கதைகளையே திரும்ப திரும்ப படிக்கும் (கெட்ட) வழக்கத்தினாலும், ஆழ்ந்த படிப்புக்காக நேரம் ஒதுக்கும் பழக்கம் இல்லாததானாலும் , உங்கள் ஒரு சில கதைகளை ஏற்கனவே படித்தாலும் முழுவதுமாக புரிந்து கொண்டதாக சொல்ல மாட்டேன்…!! புத்தருக்கு ஒரு போதி மரம் போல எனக்கு இந்த கதை… நான் இந்த கதை படித்த சூழ்நிலையும் மன நிலையும் சற்று முன்னரே வாய்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது….
இது போன்ற சமூகங்கள் (நாயாடிகள்) இருப்பதே எனக்கு தெரியாது என்பது அவ்வளவாக அவமானமாய் இல்லை; அந்த கையாலாகாத கதாநாயகனை தோளோடு சாய்த்து தேற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரே ஒரு பிரச்னை…அவனுக்கு பலமாய் நான் இருப்பதை விட்டு விட்டு நான் கதறி அழுது விட வாய்ப்பு நிறைய உண்டு….. எந்த சம்மந்தமும் இல்லாமல் அவன் அம்மா ஏன் என் அம்மாவை நினைவு படுகிறாள் என்று புரியவில்லை. (இவள் போய் சேருவதற்குள் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்களை தீர்மானம் செய்து கொள்கிறேன்) அநாகரிகமாய் ரௌத்திரமாய் வாழும் அந்த அம்மாவையும் அதிர்ச்சியும் வெறுப்புமாய் கதறும் அந்த மனைவியும்… அவமானமாய் கையாலாகாத கழிவிரக்கமுமாய் அவனும் ரொம்ப நாள் மனத்தில் நிழலாடப் போகிறார்கள். ஒரு குழந்தைக்கு பரிவுடன் தாய் இட்ட பருப்பு சாதம் (நிறைய நெய் ஊற்றி !!) போலும் நீங்கள் எழுதிய இந்த கதை எனக்கு….!!
கதையின் போக்கு, கதா பாத்திரங்களின் நிலைகள் … மெல்ல மெல்ல என்னையும் அந்த கதாநாயகனின் (முந்தைய) முடிவை நோக்கியே இட்டுச் சென்றது… திடீர் திருப்பமாக அந்த கதை முடிவு ஏற்படுத்திய அதிர்ச்சி …. கதையின் தலைப்பை ஒழுங்காக உணர்ந்த அந்த தருணம் எனக்கு இந்த ஜென்மத்திற்கும் மறக்கப்போவதில்லை. இந்த மாதிரி ஒரு நெஞ்சை உலுக்கும் கதை இப்படி ஒரு positive தீர்மானத்துடன் முடிவது படிக்கும் என் போல பாமரனுக்கு பெரும் ஆசுவாசம் தரக்கூடியது தான்… ஆனாலும் ஒரு வேளை அந்த அம்மா பிழைத்துக் கிடந்தால் (திரிந்தால் ?) எந்த அளவு அந்த தீர்மானம் அவள் வாழ்க்கைக்குள் செயலாக்கம் பெறும் என்ற (அநியாயமான) சந்தேகம் வந்து தொலைக்கிறது.
இந்த கடிதத்தை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை …. !! இது போன்ற உன்னத அனுபவம் தரும் கதைகளை தேடித் தேடி படிக்க ஆரம்பிக்கப்போவது இனிமேல் தானே ? முழுவதும் வெளிப்படுத்தவே முடியாத நன்றி உணர்ச்சியும் அடி வயிற்றில் இன்னமும் மிச்சம் இருக்கும் கேவல்களுமாய்… கை கூப்பி என் வணக்கங்கள்.
கடிதத்தில் ஒற்றுப் பிழைகள் இருந்தால் மன்னித்தருள்க….
சுரேந்திரன்
சென்னை
அன்புள்ள சுரேந்திரன்
வாழ்க்கையில் எப்போதும் தர்க்கமே முன்னால் செல்கிறது. சிலசமயம் ஆவேசமான பாய்ச்சலில் தர்க்கத்தை மீறிய ஒன்று முன்னால்சென்று விடுகிறது. இக்கதையின் முடிவும் அதுவே. ஒன்றுக்கும் உதவாத வேலையை உதறுவது தர்க்கம். அதை தாண்டிச்செல்வது தர்க்கத்தை மீறிய நியாயம்
ஜெ
அன்பார்ந்த ஜெயமோகன்
உங்கள் கதைகள் அனைத்தையும் ஒரேமுச்சில் படித்துவிடுகிறேன் நடை அப்படி. நான் திரு. இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்கும்போது அவர் சிறிய குழந்தையை கைபிடித்து அழைத்துசெல்லும் உணர்வு ஏற்படும். அதேபோல் உங்கள் எழுத்துகளை படிக்கும் போது ஏற்படுகிறது. மேலும் தங்கள் கதைகளில் வரும் அறவுணர்வு இன்றைய தேவையாய் இருக்கிறது.
இன்னும் எவ்வளவோ எழுத நினைக்கிறன் அதற்கும்மேலாக உங்கள் வாசகர்கள் எழுதிவிட்டார்கள்.
மழைகாலத்தில் அருவியில் குளிப்பதுபோல் ஒருசுகமான அனுபவம். நல்ல மனிதர்கள் நல்ல நினைவுகள் மேலும் மேலும் நமக்கு அறிமுகமாவதில் மிகுந்தமகிழ்ச்சி.
செந்தில்குமார்

அபு மர்வான்

அன்பு ஜெயமோகனுக்கு,
வணங்கான்‘ நாஞ்சில் நாட்டில் நிலவிவந்த சமூகக்கொடுமையை மையப்படுத்திச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நல்லகதை. நாஞ்சில் தமிழிலும், சில இடங்களில் நெல்லைத்தமிழிலும் மிக லாகவமாக கையாண்டிருக்கிறீர்கள்.
ஒரு முக்கிய குறிப்பை, சரித்திரம் தெற்றிவிடக் கூடாது என்பதற்காக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மார்ஷல் நேசமணி தலைமை தாங்கி நடத்திய கட்சி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். இது அன்றைய தமிழ்நாடு காங்கிரஸின் அங்கமல்ல. நேசமணியின் முழு அரசியல் வாழ்க்கை, அவரது வலது கரமும் அவர் இறக்கும் வரையிலும் அவரோடு இணைந்து பல போராட்டங்களைச் சந்தித்த திரு.ஏ.ஏ.ரசாக் எழுதிய ‘நேசமணி – ஒரு சரித்திரத் திருப்பம்’ (தமிழாலயம் பதிப்பகம், சுவாமித்தோப்பு)புத்தகத்தில் கொட்டிக்கிடக்கிறது. அதில் வரும் பல சம்பவங்களின் அடிப்படையில் நல்ல பல கதைகளை உங்களால் உருவாக்க முடியும். சாந்த குணமுடைய நேசமணித் தாத்தாவை (அவரை நான் அப்படித்தான் அழைத்து வந்திருக்கிறேன்) ஒரு அடியாள் கூட்டத்தின் தலைவனைப்போல் சித்தரித்திருப்பதை மட்டும் என்னால் உள்வாங்க முடியவில்லை. மார்ஷ‌ல் நேச‌ம‌ணி விள‌வ‌ங்கோடு தாலுகாவிலுள்ள‌ ப‌ள்ளியாடி கிராம‌த்தில் ஒரு சாதார‌ண‌ விவ‌சாயி வெள்ளையன் நாடாரின் ம‌க‌னாக‌த்தான் பிற‌ந்தார். இவ‌ர் ஏழை தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மீது ஜாதி இந்துக்க‌ளால் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ பொய் வ‌ழ‌க்குக‌ளை எடுத்து அவ‌ர்க‌ளுக்காக‌ வாத‌டினார் என்ப‌தே உண்மை.1950-ல் இந்திய அரசின் கீழ் திருவாங்கூர்-கொச்சி ச‌மஸ்தானம் வந்தது. அங்கு சம‌ஸ்தான காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசின் அங்கமாக இருந்தது. அந்த சமஸ்தான காங்கிரசுக்கும் நமது திருவாங்கூர்-தமிழ்நாடு காங்கிரசுக்கும் (Travancore Tamil Nadu Congress) எந்தவொரு தொடர்புமில்லை. ஏறக்குறைய சமஸ்தான காங்கிரசின் எதிர்கட்சியாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.
திருவாங்கூர்-தமிழ்நாடு கங்கிரஸ் தனித்தே இயங்கி வந்தது. இதன் முக்கிய குறிக்கோள் சமஸ்தானத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் வாழும் (குமரி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய) பிரதேசங்களை சென்னை ராஜதானியோடு இணைக்க வேண்டும் என்பதே.ஒரு காலகட்டத்தில் 1951-ல் சென்னை காங்கிரசின் முயற்சியால் (அமரர் தாணுலிங்க நாடார் கூறியதுபோல – சம்ஸ்தான காங்கிரசுக்கு ஒத்துழைக்க வேண்டி முன்னாள் முதல்வரும் அப்போதைய அமைச்சருமான பக்தவச்சலம் மூலமாக) ’6 அம்ச பாளையங்கோட்டை சமரச திட்டம்’ தீட்டப்பட்டது. ஆனால் அத்திட்டம் 06-10-1950 அன்று இடலாக்குடியில் நடந்த TTNC பொதுக்கமிட்டி கூட்டத்தில் தோற்றுப்போனது. அந்த துயரத்தில் போட்டி TTNC, தாணுலிங்க நாடார் தலைமையில் பிரசவமானது. இது ‘கில்ட் காங்கிரஸ்’ என்று வர்ணிக்கப்பட்டது. பின்னர் 1952-ல் நடந்த நாடளுமன்ற தேர்தலில்,  மார்ஷல் நேசமணியை குடம் சின்னத்தில் எதிர்த்து தாணுலிங்க நாடார் வண்டி சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது வரலாறு.
இளைய சமுதாயத்திற்கு தமிழ் இலக்கியத்தின்பால் மோகம் உட்டுவிக்கும் தங்களது தமிழ்ப் பணி வளரட்டும். நன்றி.
அன்புடன் அபு மர்வான்
அன்புள்ள அபு மர்வான்
என் தலைமுறைக்குச் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அக்கதை எழுதப்பட்டுள்ளது. நேசமணி அவர்களைச் சுற்றி வலுவான ஒரு தொண்டர்படை இருந்தது என்பதும் அதனால் அவர் பல வன்முறைகளை எதிர்த்து நிற்கமுடிந்தது என்பதும் நான் அறிந்தது.
ஜெ

விஜயகிருஷ்ணன், கோவைதங்கவேல், தினேஷ் நல்லசிவம்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,
மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்னுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது. அந்த நிலையிலிருந்து தற்போது பேராசிரியர் மூலம்; வியக்கும் படியான வாசகர்கள் இருவரும் ;
பேராசிரியர் ஐ ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் மூலமாக உங்களின் நினைவுகளே புனைவுகளாக மாறுகிறது என்று தொகுத்து கொண்டேன்.  மேலும் ராஜம் சொல்லவே வேணாம் ராஜமார்தண்டனையே என்று நினைக்கும் படியாக
.ஒரு ஆசிரியன் வாழ்கையின் இந்த அளவுக்கு உள்ளுணர்வில் கண்ணிருடன் நினைக்கும் தோறும் ஊடுருவமுடியுமா எனும் படியான ஆளுமையாகக் குமாரபிள்ளை.பேராசிரியர் தான்; அவரின் அடுத்த தலைமுறைக்கு, ஒரு உன்னதமான உயிர் சங்கிலி; ஏக்கம் தான் வருகிறது நல்லாசிரியன் கிடைப்பது பிறவியின் புண்ணியம்; ராஜம், குமார் அது வாய்க்க பெற்றவர்கள்,
ராஜத்தின் அந்த செயலைச் சொல்ல தெரியல. ஆனால் ஜெயமோகன் சாருக்கு பதிலாக நான் அங்கே இருந்தால் அவரை எப்படியாவது தூக்கியாவது பேராசிரியரின் முன் கொண்டு வந்திருப்பேன் அந்த கனிந்த மனிதனின் விருப்பம் தானே முக்கியம்
Regards
dineshnallasivam
என் பிரியத்துக்குரிய எழுத்தாளருக்கு,
உங்களின் ஏழாம் உலகம் நாவலைப் படித்த பிறகு அதன் பாதிப்பிலிருந்து விடுபட கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்டது. அன்றிலிருந்து உங்கள் படைப்புகளை படிக்க எனக்குள் தைரியம் வந்ததே இல்லை. சோற்றுக்கணக்கு சிறுகதையை படிக்க வேண்டுமென்ற ஆவல் மனிதனுக்கு இயற்கையிலேயே உண்டான சோற்றின் மீதான பிடிப்பின் காரணமாய் ஏற்பட்டது. இன்றைக்கு படித்தே விட்டேன்.
சாகிப் போன்ற ஒருத்தர் எனது வாழ் நாளில் வந்து சென்றிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் என்ற ஊரில் மேல் வகுப்பு படிக்கையில் ஒன்னே கால் ரூபாய்க்கு மதியச் சாப்பாடு போட்ட செட்டியார் எனக்குள் வந்து சென்றார். அழுக்கு நிறைந்த வேட்டியுடன், மேல் சட்டை ஏதுமின்றி வாங்கோ என்று வரவேற்பார். பெஞ்சில் அமர்ந்த நொடியில் இலையொன்றினை நீவி கொண்டு வந்து வைத்து, அதன் மீது தண்ணீர் தெளித்து விட்டு சாதம் வைப்பார். மனசு கூசி கொஞ்சமாய் சாப்பிடுவேன். ஒன்னேகால் ரூபாய்க்கு சாப்பாடு கிட்டுமா என்ற ஐயம் எனக்கு அவரிடம் மூன்று மாதம் சாப்பிடும் வரை வந்து கொண்டேதான் இருக்கும். பக்கத்து இலையில் வறுத்த மீன் சிவப்பாய், மணத்துடன் கிடக்கும். நாவில் ஊறும் எச்சியை பாக்கெட் கட்டுப்படுத்தும் நாட்கள் எனக்குள் நிழலாடி மறைகின்றன.
சோற்றுக்கணக்கு தான் வாழ்க்கையின் மீதான பிடிப்பிற்கு காரணம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றீர்கள். இல்லையென்றால் ராமலட்சுமிக்கு கல்யாணமே ஆகாதே? தாய், தகப்பனுக்கும் சோற்றுக்கடன் ஆற்றித் தீரத்தானே வாழ்க்கை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.அதே சோற்றுக்கடனை நமது பிள்ளைகளும் நமக்குத் தீர்ப்பரே.
உங்களின் ஒவ்வொரு படைப்பும் உள்ளத்தைக் கீறி விடுகிற ரகமாய் இருப்பதாலே, கொஞ்சம் பயமாய் இருக்கிறது உங்கள் படைப்புகளை படிக்க. ஆனாலும் மீந்து சென்ற இனிப்புச் சுவை போல மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமாய் மனது இழுக்கிறது.
தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பிரியங்களுடன்
கோவை தங்கவேல்
அன்புள்ள தங்கவேல் அவர்களுக்கு,
நன்றி
இந்தக்கதைகள் அனைத்துமே பலவருடங்களாக மனதுள் இருந்தவை. சிலகதைகள் 25 வருடங்களாக. இன்று ஒரு மனநிலையில் இக்கதைகள் அனைத்தின் வழியாகவும் நானே ஒன்றைத் தேடுகிறேன். மானுடஅறம் என நான் நம்பும் ஒன்றைத்தான். அந்த நம்பிக்கையே மிஞ்சிய வாழ்க்கையை முன்னகர்ந்த்தும் என்பதுபோல. ஒரு புணைபோல
அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை
ஜெ
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
அறம் மற்றும் தாயார்பாதம் பெண்களை ஆண்களின் பார்வையில் காட்டுகிறது. கதையிலும் ஆண்களே தங்கள் பார்வையாக வைகிறார்கள். தான் பெண்ணைத் தெய்வமாக பார்க்கிறேன் என்று எப்போதும் எண்ணுகிறான் ஒரு ஆண். பெண்ணை அறத்தொடு கூடிய வீரத்தோடும் பொறுமையான அன்போடும் மட்டுமே முக்கால்வாசிபேர் பார்கிறார்கள். அதைத்தான் பத்தினி என்றும் தாய்மை என்றும் நாம் characterization செய்கிறோம். இதில் ஆண்களின் dichotomous perception இருக்கிறது. ஏனெனில் அப்படி பார்க்கும் ஆண் தன் மனைவியை அதே உணர்வுடன் நடத்துவதில்லை. இதில் உயரிய குணம்படைத்த ஆண்களும் அப்படித்தான். உங்கள் பெண் வாசகர்களின் உணர்ச்சிகரமான கடிதங்களில் பல வீட்டின் நிலவரமும் அப்படியே இருக்கிறது போலும்.
தாயார்பாதம் கதையில் வருகிற அப்பா போல். இசையில் தேர்ச்சி பெற்றவரானதால் சமுதாயம் மதிக்கத்தக்க ஒருவர் ஏன் ஒரு பெண்ணை புரிந்துக்கொள்ளமுடியவில்லை? அவரே வேறு ஒருவர் வந்து கணவன் மனைவி உறவைப்பற்றி அறிவுரை கேட்டிருந்தால் பதில் அழகாக சொல்லியிருப்பார்.
ராமாயணத்தில் கூட ராமன் தெய்வமாக காட்டமடுவதால் சீதையின் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் பெரிதாக காட்டப்படுவதில்லை. அதை தாங்கி கொள்வது பெண்ணின் உயர்ந்த பண்பாக காட்டபடுகிறது. அதனால் தான் சீதையை இலட்சிய பெண்ணாக நம் நாட்டில் சொல்லபடுகிறது. அதுவும் ஆண்களால்.
ஒரு உண்மையை ஆணாக நானும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒரு பெண்மணி தன் கடிதத்தில் கூறியிருந்தார் ‘ஆனால் பெண்ணின் பொறுமை இல்லாவிட்டால் மக்கள் இல்லை என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது’ என்று. இன்று குடும்பங்கள் இந்திய மண்ணில் நிலைத்திருக்க முக்கிய காரணம் பெண்களே அவர்களின் பொறுமையும் தான். ஏனனில் நானும் என் வாழ்விலும் பெண்களிடத்தில் ஆண்களின் வக்கிரத்தை பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த ஆண்கள் சமுதாயத்தில் நல்ல அறிவுரை கூறுகிறவர்களாக உள்ளனர்.
ஆனால் பெண்களும் இந்த ஆண்களின் சுயநலத்தால் ஏற்படுத்திய கூற்றுக்களை ஏற்கிறார்களா? ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் போது புதிய ஆண் உறவான கணவனின் மீது உடனே ஏற்படும் பந்தமும் இந்த சமுதாய வளர்ச்சியின் காரணத்தினால்தானா? ஒரு ஆணிடம் ஏற்படும் சம்பந்தத்தினால் ஒரு பெண் தன் வாழ்கையின் முழுமையை உணர்கிறாளா?
அந்த காலத்தில் குடும்பங்கள் எப்படி இயங்கியிருக்கும் என நினைக்கக்கூட முடியவில்லை. இன்றாவது வீட்டு பெண்களுக்கு வீட்டு வேலைக்கான இயந்திரங்களும் கவனத்தை ஈர்க்க ஊடகங்களும் இருக்கின்றன. அன்று வீட்டில் பிரச்சனை என்றால் தொலைபேசி கிடையாது கடிதம் எழுதத் தெரியாது என்ன செய்திருப்பார்கள். நீங்கள் எழுதியதுப்போல் அசுரத்தனமாக வேலை செய்யத்தான் முடியும். அவர்களின் உள்ள குமுறல்களை நினைத்தாலே உடம்பு சிலிர்கிறது.
இன்று இளைஞர்களாக இருக்கும் முக்கியமாக நகர்புற பெண்களிடத்தில் இந்த எண்ணம் தளர்ந்திருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் ஆண்கள் அவ்வுளவாக மாறவில்லை.
அன்புடன்
வே. விஜயகிருஷ்ணன்
அன்புள்ள விஜயகிருஷ்ணன்
மதிப்பீடுகளின் வரிசை காலத்துக்கு ஏற்ப மாறும், மாறாமல் இருக்கமுடியாது. ஆனால் தாய்மை போன்றவை உயிரியல் பண்புகள். தன் தங்கிவாழ்தலுக்காக ஒவ்வொரு உயிரும் ஒவ்வொருவகையில் உருவாக்கிக் கொள்பவை. அவை முழுமையான மாற்றத்துக்குள்ளாகும் என நான் நினைக்கவில்லை. அவை வெறும் சமூகப்பயிற்சிகள் என தொண்ணூறுகள் வரைக்கும்கூட சில பெண்ணியர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மானுட நடத்தைகள் உயிரியல் பண்புகளே என்று இன்று சொல்லப்படுகிறது. பெண்ணுக்கு நாம் சொல்லிவந்த பல இயல்புகள் மாறும், தாய்மை அப்படியேதான் இருக்கும் என்றே நினைக்கிறேன்
ஜெ

அரவிந்தன் சொக்கன், ராஜா சந்திரசேகர், சந்தோஷ்

அன்புள்ள ஜெ
கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்று சாத்தியமா, இல்லையென்றால் என்ன காரணம்? நன்மை தீமை அனைத்து காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது நாணயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டதா?. இந்த சூழல் தொடரும் பட்சத்தில் எதிர்கால அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நாணயமே இல்லா உலகமாக மாறிவிடுமா?. உங்கள் பார்வை…
அன்புடன்
அரவிந்த் சொக்கன்
கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்றும் உள்ளன. கேரளத்தில் ஒருமுறை பயணம் செய்யும்போது மலப்புரத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பாய் காசு வாங்கவில்லை, உண்டியல். திருவனந்தபுரத்தில் டாக்டர் திருமதி பை என்பவர் பில் கொடுப்பதில்லை, நன்கொடை மட்டுமே. கோவையில்கூட ஒரு ஓட்டல் உள்ளது
ஆனால் இவை இன்று சாத்தியமல்ல. இவை நிலப்பிரபுத்துவ அறங்கள். முதலாளித்துவ உலகம் இவற்றை ஆதரிக்காது. ஆனால் இந்த அறத்துக்கு முதலாளித்துவ மறுபதிப்பு ஒன்று உண்டு. அது உற்பத்தியில் நேர்மை என்று சொல்லலாம்.
ஜெ
அன்புள்ள ஜெ
தங்கள் மத்துறு தயிர் படித்தேன்.கம்பனை மட்டுமல்ல தற்காலக் கதைகளை வாசிக்கவும் நல்ல குரு தேவைப் படுகிறார்.நீங்கள் நல்ல குரு
தேவாரத்திலும் மத்தார் தயிராகச் சிந்தையை உருவகித்திருக்கின்றார் அப்பர் (நான்காம் திருமுறை)
பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே 4திருமுறை 52 பதிகம் 9பாடல்
.
பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 4திருமுறை 96 பதிகம் 3 பாடல்
மன நல மருத்துவனான என் பார்வையில் கதையில் ராஜத்தைக் குறித்த பேராசிரியரின் குற்ற உணர்வும் ஒரு அடி நாதமாக விளங்குகிறது என நினைக்கிறேன்.பேராசிரியர் கண்ட கனவு சற்று சுவாரசியமானது.ராஜம் குறித்த அவரது நிறைவேறா ஆசை கனவில் நிறைவடைகிறது.அதே நேரம் தன் குரு போல் தான் இல்லையோ என்ற குற்ற உணர்ச்சிதான் குமாரப்பிள்ளையின் பேரை விட்டு விட்டீர்களே என்று சொல்ல வைக்கிறது.நல்ல கலைஞனுக்குத் தான் செய்யாமல் விட்ட செயல்களைப் பற்றிய ஒரு குற்ற உணர்வு அதிகமாக இருக்கும்.
இது போல் பல் வேறு வாசிப்புச் சாத்தியங்க்களை வழங்குகிறது பிரதி
அவரவர் மனதில் அவரவர் மத்து!!
அன்புடன்
ராமானுஜம்
சோற்றுக்கணக்கு-உணர்வில் படியும் ருசி
சோற்றுக்கணக்கு -உணர்வுகளை நுட்பமாய் நெய்யும் கதை.
கெத்தேல் சாகிப்,இன்ஷா அல்லா.இவரும் ஒரு கடவுளைப்போலத்தான்.
கதைசொல்லியின் துயரங்களும் அவன் பயணத்தில் கண்டடையும்
கெத்தேல் சாகிப்பும் அவரின் அக புற உலகங்களும் பல ரஸவாதங்களாய்
நம்மைத் தொட்டுக்கொண்டே செல்கின்றன.எங்கும் தீர்ந்துபோகாத கதை
கெத்தேல் சாகிப் போலவே நமக்கு நிறைய பரிமாறிச் செல்கிறது.
#மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’
#நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும்,
சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என விரியும் வரிகளும்
வாழ்வின் வார்ப்பில் வெளிப்படும் மனித பகுப்புகளும் கதையின் தீவிரத்தை அதன்
கட்டமைப்போடு எடுத்துச் செல்கின்றன.
கதையின் ருசி மனதில் தங்கிபோகிறது,கெத்தேல் சாகிப்பின் மீன் ருசியைப்போல.
அன்புடன்
ராஜா சந்திரசேகர்
அன்புள்ள ஜெயமோகன்;
வணக்கம்,நலமறிய ஆவல்.
சோற்றுக்கனக்கு சிறுகதை குறித்து திரு. ராஜகோபாலன் அவர்கள் எழுதிருந்த கடிதம் படித்தேன்.
வாசகனையும் எழுத்தாளனாக்கும் வல்லமை எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. இந்த இரண்டு சிறுகதைகளையும் ஒரே மூச்சில் நெட் சென்டரில் வாசித்தேன். கண்களிருந்து கண்ணீர் ஒழுகிய வண்ணம் இருந்தது.
அந்த நெட் சென்டரை நடத்துபவர் அதிர்ச்சியுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உங்கள் எழுத்தை படிப்பதை விடவும் சிறந்த அனுபவம் இந்த பிறப்பில் எனக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
அன்புடன்
சந்தோஷ்

தாஜ் கட்டுரை

இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு….. ஜெயமோகன் தந்திருக்கும் இருட்டுக்கடை அல்வா – தாஜ்

தாஜூடையது எவ்வ்வ்வளவு நீளம். தலைப்பைச் சொன்னேன்! ஆபிதீன் பக்கம்தான்; ஆனாலும் ஆபிதீன் கொஞ்சம் எழுதவா? வம்பில் மாட்டி விடுகிறார் இந்த தாஜ். என்ன சொல்வது? தக்தீர். ஆமாம், நானாகத்தான் மாட்டிக்கொண்டேன் .சரி, முதலில் ’ஜெயமோகன் Vs தாஜ் – Part 1’ படியுங்கள். ஆச்சா? என் முனகல்களுக்குப் பிறகு வருவது Part 2…!
அரபுலக மக்கள் எழுச்சியால் அச்சத்தில் உறைந்திருக்கும் மன்னர்கள் பற்றி எழுதினால் ஆப்படித்து விடுவார்கள். எனவே ஆபத்தில்லாத இலக்கியம். ஐயோ, இலக்கியத்தில் ஆபத்து இல்லையென்று எவர் சொன்னது?!
ஜெயமோகனின் எல்லா படைப்புகளையும் (முக்கியமாக காடு, ரப்பர்) நான் படித்ததில்லை; என் சூழல் அப்படி. சுமையும் அப்படி. நாம் ஆறு பக்கம் படிப்பதற்கு முன்பே ஆறு புத்தகங்கள் எழுதிவிடுகிறாரே அவர். படித்தவரை – அரசியல் தவிர்த்து –  அவரது எழுத்தும் எள்ளலும் எனக்குப் பிடிக்கும். விசிஷ்டாத்வ விவாதத்தைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். இந்திய இலக்கிய விவாதத்தையும்தான். ’பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள முயலாமல் இருப்பதே அதை புரிந்துகொள்ள உகந்த வழியாகும்’ என்று அவர் எழுதும்போது சிரிக்காமல் என்ன செய்வது சார்?  எல்லோருடைய எழுத்தும் எனக்குப் பிடிக்கும் (சுத்தம்!) . ஏதும் இதுவரை எழுதாமல் மௌனமாக வாசிக்கும் உங்களையோ.. ஆஹா, ரொம்பவும் பிடிக்கும்! இதெல்லாம் என் நண்பர்களுக்குப் பிடிக்காது. அதாவது எனக்குப் பிடிப்பது அவர்களுக்குப் பிடிக்காது. ஆனால் அவர்களுக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும் பிடிக்கும். சே, ஒரே குழப்பம்… எலக்கிய எளவு செய்யப்போகிறேனோ? நிறுத்தித் தொலைகிறேன். வேறு ஒன்றுமில்லை, ’அறம்’ கதையைப் படித்து நெகிழ்ந்து போன நான், அரசியல் மண்ணாங்கட்டியெல்லாம் தெரியாத மண்ணாந்தையான நான் (இருமுறை ’நான்’ வருவதை அகங்காரத்தோடு மன்னித்துவிடவும்) பாராட்டி எழுதச் சொன்னேன் தாஜை. நானே எழுதினால் என்ன? ஏற்கனவே ‘அங்கண ஒண்ணு’க்கு பாராட்டு வாங்கியிருந்ததால் – அதனாலேயே ’காஃபிர்’ பட்டமும் வாங்கியதால் – பதிலுக்குச் சொரிகிறேன் என்று வந்துவிடுமே என்றுதான். ம்ம்.. விமர்சனம் செய்வதல்லாம் அறிஞர்கள் வேலையல்லவா? அப்போ தாஜை ஏன் எழுதச் சொல்லனும் என்று கேட்டு மேலும் வம்பை வளர்க்காதீர்கள். இந்த தாஜ் ’அறம்’ படித்துவிட்டு . ‘அதிலும் அரசியல் இருக்குய்யா.. அதெல்லாம் ஒன் நாகூர் காஞ்ச மூளைக்கு ஒண்ணும் தெரியாது’ என்று சொல்லிவிட்டு (நாகூரை – முக்கியமாக குஞ்சாலி மரைக்கார் தெருவை – ரொம்ப சரியாக புரிந்திருக்கிறார் இவர்!) , அத்தோடு நில்லாமல் சோற்றுக்கணக்கிலும்’ சில சோறுகள் பதம் பார்த்துவிட்டார். ‘யோவ்.. உனக்கு சங்கடம்னா போடாதே… இது என் பார்வை; அவ்வளவுதான்’.என்றார். ’போடுறதுக்கென்னாய்யா? கூட்டாளிங்க யார் ‘மொய்’ வச்சாலும் போடுவேன். ஆனா அடி வுளுந்தா நீம்பர்தான் வாங்கனும்’. ‘அத நான் பாத்துக்குறேன். லேட்டஸ்டா  தமிழ்நதிநல்லா கிழிச்சிருக்கான் பாரும்’ ‘கார்’ ‘ஓய், இதுவா முக்யம்? பாரும்’. ’சரி’.
விசயத்திற்கு வருகிறேன், ’ஜெயமோகன் Vs  தாஜ்’ (Part 1) வெளிவந்த சமயத்தில், எழுதக்கூசும் மறுமொழியைப் பெற்றது. வெறியோடு மொழிந்தவர் பெயரும் மஹா பயங்கரம். ஒருவாரம் தனது வலைப் பதிவில் ’அதை’ வைத்திருந்த தாஜ் தனது குடும்பத்தாரின் வற்புறுத்தலுக்கிணங்க பிறகு நீக்கி விட்டார் (Screen Shot என்னிடமில்லை. இருந்தாலும் நான் சொல்வதை நீங்கள் நம்பலாம்). அதன் பிறகு வந்தது ’நான் கடவுள்’. ஜெயமோகனின் வசன வலிமையை மிகவும் பாராட்டினார் தாஜ். அதுதான் ’பெரியாரிஸ்ட்’ தாஜ். (கடவுளைத் திட்டினால்தான் இந்த ஆளுக்குப் பிடிக்குமே!). நல்ல விசயங்களைப் பாராட்டத் தயங்காத நண்பராதலால் தன், சாரி, என் கதைகளைப் பாராட்டுவதில்லை. நாயனின் தீர்ப்பு!
இந்த விமர்சனத்தில் தாஜ் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று வைக்கம் பஷீரை ஜெயமோகனுக்குப் பிடிக்காது என்பது. அதற்கு அவர் ஆதாரம் ஏதும் தரவில்லை. நான் படித்தவரை பஷீரை மிக உயர்வாகவே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். ’இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?’ என்ற கேள்விக்கு ’வைக்கம் முகமது பஷீர்தான்’ என்கிறார். பார்க்க :    புன்னகைக்கும் பெருவெளி |  மொழியின் புன்னகை  . அதைவிட தன்னை உயர்வாக எங்காவது சொல்லியிருப்பாரோ ஜெயமோகன்? தெரியவில்லை. அட, சொன்னால்தான் என்ன? நான்கூடத்தான் எழுத்தாளன் என்று சமயத்தில் சொல்லிக்கொள்கிறேன். உண்மையா அது? என்னைத்தவிர எல்லோருமே நன்றாக எழுதுகிறார்களே… தூக்கிப்போட்டுவிட்டு வேலையைப் பார்க்கப் போங்கள் ஐயா..  ’இத்தனை நாள் ஏன் ‘கெத்தேல் சாகிப்’ பற்றி எழுதவில்லை?’ என்று தாஜ் கேட்பதெல்லாம் ரொம்பவும் ஓவர்.
’விமர்சகனின் பார்வையில்’ சிறந்த நாவல்களில் ஒன்றாக தோப்பில் முகமது மீரானுடையதைச் சொன்னாலும், குறிப்பிடவேண்டிய நண்பர்களான ஜாகீர்ராஜாவையும் , மீரான்மைதீனையும் அவ்வப்போது குறிப்பிட்டாலும் பொதுவாக தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை (மனுஷ்யபுத்திரன் முஸ்லிமா என்று தெரியவில்லை!) ஜெயமோகன் கண்டுகொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் ’தோப்பிலை’த் தவிர்த்து (படைப்பிலக்கியத்தில் ) யாரும் தொடர்ந்து இயங்குவதில்லையே.. நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரே வழி, தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தினம் மூவாயிரம் பக்கங்கள் எழுதுவதுதான். ஜமாலன் சார், ஸ்டார்ட்!
ஒரு கிண்டல் மேற்கோள் :
‘நான்கடந்த இருபதாண்டுகளாக தொடர்ந்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பழகிப்போனவன். சரியாக புரிந்துகொண்டவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள்!’ – ஜெயமோகன்
ஒரு சின்ன கதையைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். சாகித்திய அகாதமி பரிசு பெற்ற , கோவிலன் எழுதிய ’தட்டகம்’ நாவலில் வருகிறது:
முற்காலத்தில் பருந்து ஒன்று எலிக்குட்டியைக் கொத்தியெடுத்துப் பறந்தது. அப்போது ஆயுளின் வலிமையால் பருந்தின் நகங்களில் சிக்கித் துடித்த எலிக்குட்டி ஜல தர்ப்பணம் பண்ணிக் கொண்டிருந்த முனிவரின் உள்ளங்கையில் விழுந்தது. முனிவரின் விருப்பத்திற்கேற்ப அந்தச் சிற்றுயிர் மனித உருவத்தில் வளர்ந்தது. அழகு நிரம்பிய கன்னிப்பெண். எல்லாத் திறமைகளும் பொருந்திய ஒரு ஆடவன் கன்னிகையை மணம் புரியவேண்டும் என்பது முனிவரின் ஆவல். கணக்கற்ற கதிர்களைக் கொண்ட சூரியனை முனிவர் அனுகினார் . சூரியன் கூறினான்:
‘என்னைக் காட்டிலும் தகுதியுடையவன் மேகம் ஆவான். மேகம் பலமுறை என்னை மறைக்கிறான். ஒளி குன்ற வைக்கிறான்’
திருமண ஆலோசனையுடன் முனிவர் மேகத்தை அணுகினார். மேகம் சொன்னான்:
‘மலையே என்னைக் காட்டிலும் பெரும் தகுதி கொண்டவன். மலை என்னைத் தடுத்து நிறுத்துகிறான். பாதை தெரியாமல் நான் சிதறிப் போகிறேன்.’
முனிவர் மலையிடம் போனார். மலை சொன்னான் : ‘மகா முனிவரே.. என் இயலாமையைத் தாங்கள் காணவில்லையா? அசையக் கூட இயலாத துன்பத்தில் இருக்கும் என்னை எலி குடைகிறது பாருங்கள். எத்தனை எத்தனை பொந்துகள்.  எலியே சகல ஆற்றலும் முழுத் தகுதியுமுடையவன்’ என்று. உணர்ந்த முனிவர் எலியிடம் வேண்டினார். ‘மூஷிக வீரனே, இவள் கன்னிப் பெண். என் வளர்ப்பு மகள்; தாங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’. எலி திடுக்கிட்டது. ‘தங்களின் மகள் ஒரு மனிதப் பெண்; நான் எப்படி ஏற்றுக்கொள்வது’ மகளின் நெற்றியில் முனிவர் ஆசி வழங்கினார். வட்டக்காதும் , வாலும் முளைத்து அவள் மீண்டும் எலியானாள்.
அவ்வளவுதான் கதை. இந்த பதிவுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? அதான் இலக்கியம்!
**
சோற்றுக்கணக்கு: இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு….. ஜெயமோகன் தந்திருக்கும் இருட்டுக்கடை அல்வா
ஜெயமோகனின் இணைய தளத்தில்
அவரது சமீபத்திய சிறுகதையான
சோற்றுக்கணக்கு‘ படித்தேன்.
வறுமையின் அழிச்சாட்டியம்/
உறுத்தும் பசி/
தனி மனித மாண்புகளென
இதுகாரும் தீரப் பேசிய புனைவுகளில்
சொல்லத் தகுந்த புனைவு இது.
அத்தனைக்கு வளம்!
*
இவ்வாண்டு
நாஞ்சில் நாடனுக்கு கிட்டிய
சாகித்தியஅகாடமி விருதையொட்டி அவருக்கு
சென்னை – ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில்
ஜெயமோகன் தயவில் / டைரக்சனில்
நடந்தேறிய பாராட்டுக் கூட்டத்தில்
நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான
‘கான் சாகிப்’ வெளியீடும் நிகழ்ந்தது.
விழாவுக்கு போயிருந்த நான்
அத்தொகுப்பை அங்கே வாங்கினேன்.
அன்று இரவே
குறிப்பிட்ட அந்தக் கதையைப் படித்தேன்.
மறுநாள் புத்தகத் திருவிழாவில்
நாஞ்சில் நாடன் அவர்களை சந்திக்க வாய்த்தபோது
‘கான் சாகிப்’ குறித்து அவரிடம் சிலாகிக்கவும் செய்தேன்.

‘கான் சாகிப்’
சுத்த யதார்த்தம் சார்ந்த புனைவு.
ஜெயமோகனுடனான நேர்ப்பேச்சில்
நிகழ்வின் சம்பவங்களை நினைவுகூர்ந்து
நாஞ்சில் நாடன்
சொல்வது மாதிரியான அமைப்பியல்.
பம்பாயில் வைத்துப் பழகிய
இஸ்மாமிய நண்பர் ஒருவரின்
ஆத்மார்த்த நினைவுகளின் தொகுப்பாய்
அவரது மாண்புகளையும்
குறிப்பாய் அவரது விருந்து உபசரிப்புகளையும் மெச்சி
நாஞ்சில் நாடன்
மனமுருக சொல்லிக் காட்டியிருக்கிற கதைதான்
‘கான் சாகிப்’
அது பலரது பாராட்டையும் பெற்றக் கதையும் கூட.
கிட்டத்தட்ட இதே ரிதத்தில்தான்
இன்றைக்கு தன் சோற்றுக்கணக்கை
நமக்குச் சொல்லி நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் ஜெயமோகன்.
ஆனால்….. 
*
பொதுவில்…
தான் எழுதும் புனைவுகளில்
கற்பனைக்கு
முக்கியத்துவம் தருபவர் ஜெயமோகன்.
இலக்கிய ஆக்கத்திற்கு அதுதான்
ஆகச் சிறந்த யுக்தியெனவும் போதிப்பவர்.
கூடவே
தனது கற்பனைக் குதிரையின் வேகத்தை மெச்சிக் கொள்பவர்.
பறக்கும் தன்மை வாய்ந்ததென்றும் நம்புபவர்.
அவரது நம்பிக்கை பொய்க்காதபடிக்கு
அவர் குதிரை பறந்துகொண்டுதான் இருக்கிறது.
அவரும் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இந்தக் கதை,
அவரது இலக்கியநெறியின் பிரதிபலிப்பாக இல்லாமல்
நவீனம் சார்ந்த யதார்த்தத் தோற்றம் கொண்டதாக இருக்கிறது.
இப்படித் தோற்றம் கொள்ளும் கதைகளை
இதற்கு முன்பும் அவர் எழுதி இருக்கிறார்.
‘தோற்றம்’ என்பதை இங்கே அடிக்கோடிடுகிறேன்.
இந்தக் கதையில்
கதையின் காலமும்….
கதையின் களமும்….
துல்லியம் காணப்பட்டிருக்கிறது.
கதையின் மையமாக காட்டப்பட்டிருக்கும்
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடையின்
நேற்றைய, இன்றைய விலாசம்
முந்தைய அதன் சிறப்புகள்
இன்றைய அதன் வளர்ச்சிகள் என்பனவெல்லாம்
படு சுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
‘கெத்தேல் சாகிப்’ குறித்து
கதையின் நாயகன் தன் நினைவுகளிலிருந்து
வியக்கும் வியப்புகளின் தொகை
சரமாரியாகப் பதிவாகி இருக்கிறது.
இதெல்லாம்….
ஓர் யதார்த்தக் கதையின் கூறுகளென
அறுதியிட முடியும்.
இந்தக் கதையின்படி
நம்பத்தகுந்த தகவல்களென
இன்னும் சிலவற்றையும் குறிப்பிடலாம்.
கதை நாயகனது இளமைக்கால வறுமை./
அவன் அனுபவித்த பசி/
கல்லூரிப் படிப்புக்காக கொண்ட சிரமங்கள்/
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடையின்
பதார்த்தங்களது மணம், நிறம், ருசி/
‘கெத்தேல் சாகிப்’பின்
அன்பு மேவும் செல்ல வசவுகள்.
அந்தச் சாப்பாட்டுக்கடையில்
பணம் தரவேண்டிய நிர்ப்பந்தமற்ற வசதி/
ஐந்து வருட காலம்
கதையின் நாயகன் அதனை
உபயோகித்துக் கொண்ட நிலை/
பசி போக்கி,. உடல் பேணிய
‘கெத்தேல் சாகிப்’பின் கரத்தை
ஓர் தாயிற்கே உரிய கரமாக
கதையின் நாயகன் பார்ப்பதென்பதெல்லாம்
யதார்த்தம் சார்ந்த
நம்பத்தகுந்த தகவலாகவே இருக்கிறது.
இந்தக் கதையினூடே
கதை சொல்லியாக/ நாயகனாக
நான்.. நான்.. என தன்னை வாசகனுக்கு வலுவில்
உணர்த்த முற்படும் ஜெயமோகன்
அக்கதையின்
எல்லா விளிம்புகளிலும் திருப்பங்களிலும்
இருக்கிறாரா? என்பதை
நம்மால் உறுதிசெய்ய இயலாது.
என்றாலும்….
இக்கதையினூடே தன்னை அவர்
முன்னிலைப் படுத்திக் கொள்வதை
உறுதிசெய்யமுடியும்.
இக்கதையில்
ஜெயமோகன் தன்னை
முன்னிலைப் படுத்திக் கொள்ளாது,
ஒரு குப்பனையோ சுப்பனையோ
முன்னிலைப் படுத்தியிருக்கும் பட்சம்
இந்த விமர்சன ஆய்வு தேவையே பட்டிருக்காது.
*
கதைப்படி…
காலேஜில் சேரும் அவரது வயது கணக்கு/
(1968-ல் காலேஜில் சேர்ந்தேன் என்கிறார் ஜெயமோகன்.
1962-ல் பிறந்த அவர்,
1968-ல் ஆரம்பப் பள்ளியில்
இரண்டாம் வகுப்பில்
காலடியெடுத்து வைத்திருந்தாலே அதிகம்.)
அப்புறம்…
டிரைவராக பணியில் சேரும் தம்பி/
தமிழ்சினிமா கதாநாயகன் மாதிரி
செஞ்சோற்றுக் கடனுக்காக
அவர் செய்துகொள்ளும் திருமணம்…
இவையெல்லாம்….
ஜெயமோகன் குறித்து
நான் அறிந்த தகவல்களின் அடிப்படையில்
ஒத்துப் போகாத முரண்கள்.
ஓர் யதார்த்தப் புனைவில்
அதன் எல்லா கூறுகளுமே
யதார்த்தம் சார்ந்து இருக்கணும் என்கிற
கட்டாயம் ஏதுமில்லை என்பதை
இங்கே ஒப்புக்கொண்டாலும்
குறிப்பிட்ட இந்த விமர்சன ஆய்வில்
கதையின் எல்லா கூறுகளையும்
நுணுக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
*
ஜெயமோகனின் கட்டுரை ஒன்றில்
தனக்கு அன்பு காட்டிய
இஸ்லாமிய நண்பன் ஒருவனின்
தந்தைக்குச் சொந்தமான
மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ள
ஓர் அறையில்
வெகுகாலம் தங்கிப் படித்ததாக
அவர் எழுத, நான் படித்த ஞாபகமும் உண்டு.
ஆனால்….
இது நாள்வரை
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாடுக் கடையைப் பற்றி
அவர் எந்த ஒரு சின்னத் துணுக்கையும்
எழுதி நான் படித்ததில்லை.
ஆக,
இந்தக் கதையை
அவர் சொல்லிய விதமாகவே
இது…
அவரது வாழ்வு சார்ந்த/
அனுபவம் சார்ந்த/
யதார்த்த நிகழ்வுகளின் பதிவாக
ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால்….
என் மனம் உறுத்தும் கேள்விகளுக்கு
பதில் தேட வேண்டியிருக்கும்.

தன் வாழ்வு சார்ந்த
இத்தனை நெகிழ்ச்சிகள் கொண்ட
சம்பவங்களின் அடுக்கடுக்கான
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடை பற்றி
ஏன் இத்தனை காலமும் ஜெயமோகன் எழுதவில்லை?
இதுவரை அவர் நூற்றுக்கும் மேலாக
சிறுகதைகளை எழுதியிருப்பவர்!
அந்தச் சாப்பாட்டுக்கடைக்கு
ஓர் சிறுகதைக்கு மீறிய வீச்சும்
போதும் போதும் என்கிற அளவில்
நெகிழ்ச்சிகளும் இருந்தும் ஏன் எழுதவில்லை?
விடை ரொம்பவும் வெளிப்படை.
இந்தக் கதை,
யதார்த்தமற்ற
முழுக்க முழுக்க கற்பனையிலான
அச்சு அசல் புனைவு!
புனைவில் கற்பனைக் குறித்து பாடம் எடுத்தவர்
இப்பவும்
அதன் வெற்றியை நிரூபித்திருக்கிறார்.
தவிர,
கதையில் ஜெயமோகன் வியப்பது மாதிரி
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக் கடை
இக்கதையின் பிரதான சங்கதியுமல்ல.
பின்னே…..?
”என் கனவெல்லாம் சோறு.
ஒருநாள் சாலையில் ஒரு நாய்
அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை
எடுத்துக்கொண்டுபோய்
குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி
சுட்டுத் தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி சட்டையில்
வழிந்து விட்டது அன்று.”
(சோற்றுக்கணக்கு/ ஜெயமோகன்)
இத்தனை அழுத்தம் தருகிற அளவில்
அவர் சொல்லிக் காட்டியிருக்கும்
அவரது இளமைக்கால வறுமையும்
அதையொட்டிய பசியால் அவர் இன்னலுற்றதும்தான்
இக்கதையின் பிரதானம்.
மற்றதெல்லாம்,
அவர் தன் சொல்லவந்த தன்னைக் குறித்த
செய்திகளை தூக்கி நிறுத்தும் சங்கதிகள் மட்டும்தான்.
அவரின் இளமைக்கால இன்னல்களைப் பற்றி…
அதனோடு கூடிய வறுமை, பசியைப் பற்றியெல்லாம்
முன்னமே நிறையதரம் சொல்லியிருக்கிறார்.
இருந்தும்…
இப்பவும்
அப்படி சொல்லிக் காட்டியிருக்கிறார் என்றால்
அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
இப்படிச் சொல்வதென்பது ஓர்
எழுத்துச் சார்ந்த ‘அரசியல்’.
அவர் குறித்த கழிவிரக்கம் எழுப்பும் பிம்பங்கள்
வாசகர்களின் மனதில்
அவரது இருப்பை அழியா ஆழத்தில்
ஊன்றி நிலைப்படுத்த வல்லது.
இப்போது
மீண்டும் ஒருமுறை
இந்தக் கதையின் வழியே
அவர் அப்படி சொல்லிக் கொள்வது
அவரை நோக்கி அணையும்
இன்றைய புதிய வாசகர்களை
மனதில்வைத்து சொன்னதாக கொள்ளலாம்.
சரி…
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடை?
இந்தக் கதையில்
அதுவோர் ஊறுகாய் சங்கதி!
தன்னைக் குறித்து கதையில் ரசனையாகப் பேச
அவர் தொட்டுக் கொண்ட ஒன்று.
அதை அவர் பிரமாண்டமாக காண்பித்திருப்பதுதான்
அவரது எழுத்து சார்ந்த திறன்..
அதை, யுக்தி… வித்தை… என்றும்கூட சொல்லலாம்.
இத்தகைய யுக்திகளையும் வித்தைகளையும்
வாசகன் அறிந்துணர்வதென்பது கஷ்டம்.
சரியாகச் சொன்னால்
எந்தவோர் துறையிலும்
ஓர் திறமையாளனின் சூட்சமம் கொண்ட வித்தைகள்
அடுத்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் பிடிபடாது.
இந்த சூட்சமம் குறித்து
இன்னும் யோசிக்கிற போது….
இலக்கியத்திற்குள் வரும்/
நெட்டில் சதா நேரமும் அவரைத் தேடிவரும்/
இன்னும்,
அவரது புத்தகங்களை புதிதாக வாங்கி வாசிக்க வரும்/
இலக்கிய ஆர்வம் கொண்ட
இஸ்லாமிய இளவல்களின் எண்ணிக்கை
அவருக்கு வியப்பூட்டியிருக்கலாம்.
அதையொட்டி
அவரது வாழும் வியாபார ஞானம் விழித்துக்கொண்டிருக்கலாம்.
அவர்களை தன் வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கும் முகமாக
அவர் கேள்விப்பட்ட
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக் கடையை
இக்கதையில்
மிகச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டிருக்கலாம்.
நான்,
அவரது பெரும்பாலான கதைகளை
வாசித்தவன் என்கிறவகையில்
இஸ்லாமிய கதாபாத்திரங்கள்
அவரது கதைகளில்
சொல்லும் அளவில் இருந்தது இல்லை.
இத்தனைக்கும் அவர்
சாதி/ மத/ இன/ பேதம் பாராட்டாத
நாராயண குருவின் வழி பேணுபவர்
ஆனாலும் இஸ்லாமியன் என்றாலே
இவருக்கு ஏனோ ஆவதில்லை..
இஸ்லாமியர்களில்
நல்லவர்களே இல்லை என நம்பும்
நல்லவர்களுக்கு மட்டுமே இவர் நண்பர்.
இஸ்லாமியர்களின் நிஜங்களுக்கு குரல் கொடுத்து
அவர்களுக்கு ஆறுதலாக அவ்வப்போது
மீடியாக்களில் வழக்காடி வரும் பேராசிரியர். அ.மார்க்ஸை,
அதற்காகவே கண்டித்தவர் இவர்.
அப்படியான ஜெயமோகன்
இன்றைக்கு…
‘கெத்தேல் சாயபு’ என்கிற இஸ்லாமியரின்
மாண்புகள் எதிரொலிக்க
மெச்சி எழுதினார் என்பது
நம்ப முடியாத செய்தி.
எழுதியிருக்கிறாரே… என்றாலும்
ஆத்மார்த்தமாக அவர் எழுதியிக்கவே மாட்டார்.
அது அவருக்கு வராது.
அப்படியொரு பார்வையே அவருக்கு கிடையாது.
இஸ்லாமிய எழுத்தாளர்களான
‘மதில்கள்’ வைக்கம் முகம்மது பசீராகட்டும்
‘கடலோரக் கிராமம்’ தோப்பில் முகம்மது மீரானாகட்டும்
முன்னால் இலக்கிய ஆகிருதியும்
இன்னால் பிரபல மொழிபெயர்ப்பாளருமான
நாகூர் ரூமி என்கிற, பேராசிரியர் / கவிஞர் ரஃபியாகட்டும்
அப்துல் ஹமீத் என்கிற, கவிஞர்/ ’உயிர்மை’ மனுஷ்யபுத்திரனாகட்டும்கவிஞர் சல்மாவாகட்டும்
யாரையும் அவருக்குப் பிடிக்காது
– என்னையும் சேர்த்து.

*
நாஞ்சில் நாடனின் ‘கான் சாகிப்’
நிஜத்தின் பதிவென்றால்
ஜெயமோகனின் ’சோற்றுக்கணக்கு’
அதன் நேர் எதிர்.
கற்பனையும் யுக்திகளுமானதோர் வித்தை.
*
சோற்றுக்கணக்கைப் படித்துவிட்டு
ஜெயமோகன் இஸ்லாமியனின் மாண்பைப்
பாராட்டிவிட்டாரென குதிக்கும்
இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு.
இக்கதையின் வழியே
நிஜத்தில்
அவர் தந்திருப்பது
இருட்டுக்கடை ஸ்பெஷல் அல்வா!
பாவம் அவர்கள்,
இடம் பொருள் அறியாமல் ஏமாறுகிறார்கள்.
*
*
ஒரே ஒரு சுட்டி : தமிழில் சிறுபான்மை இலக்கியம் - ஜெயமோகன்

32 பின்னூட்டங்கள்



  1. 24/02/2011 இல் 10:48
    //ஒரே வழி, தமிழ் முஸ்லிம்களும் அனைவரும் தினம் மூவாயிரம் பக்கங்கள் எழுதுவதுதான். ஜமாலன் சார், ஸ்டார்ட்!//
    முதலில் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் லிஸ்டில் சேர்க்காதீர்கள். அதற்கும் சேர்த்து நீங்கள் பதில்சொல்ல வேண்டிவரும் இறதிநாளில். காபிரை முஸ்லிம் என்று எப்படி லிஸ்டில் செர்த்தாய் என்று. உங்களை நான் நரகத்திலும் சந்திக்க விரும்பவில்லை. முதலில் எனக்கு இந்த முஸ்லிம், ஆண், தமிழன், இந்தியன், நல்லவன், குடிகாரன் இன்னபிற அடையாளங்களில் நம்பிக்கை இல்லை. அதனால் மன்னிக்கவும்.. (((
    அடுத்து என்னை நீங்கள் “சார்“ என்று அழைப்பது பள்ளிக்கூடத்தை நினைவுட்டுகிறது. அதனால் என்னைப்போல் சாரின் உட்காரும் இடத்தில் ஆணி அடித்துவிடுவீர்களோ என்கிற அச்சம்தான். )))
    மற்றபடி தாஜின் இக்கட்டுரையின் அடிப்படையான புரிதலே சிக்கலானது. எனது கருத்தை விரிவாக எழுதுகிறேன். நீங்கள் விரும்பினால் ஓரிரு நாட்களில் அதை பதிவிடலாம். புரியறா மாதிரியே எழுதுறேன். )))
  2. 24/02/2011 இல் 10:56
    //புரியற மாதிரியே எழுதுறேன். // சரி சார்!
    ஆணியுடன்,
    ஆபிதீன்
  3. 24/02/2011 இல் 14:00
    என்னா ஒரு வில்லத்தனம்.. ஆணிய பிடங்கிடறேன். ஹா ஹா.. விடமாட்டீங்களா சார் இந்த சாரை.
  4. அநிருத்தன் said,

    24/02/2011 இல் 15:41
    என்ன சொல்லி தாஜ் “அவர்களை” ?
    இவ்வளவுதானாய்யா உங்க அறிவு ? ஒரு கதையை வாசிக்கும் விதம் இதாய்யா ?
    இந்த கதை அவருடைய நண்பர் குமாருடையது என்று போரமில் கொல்லியிருக்கிறார் , (முழுசா அல்ல) கதை எழுதறவன் இதையெல்லாமா எழுதமுடியும் ?
    ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா . எனக்கு ஆபிதீனை பாத்தா பாவமா இருக்கு .
    //மற்றதெல்லாம்,
    அவர் தன் சொல்லவந்த தன்னைக் குறித்த
    செய்திகளை தூக்கி நிறுத்தும் சங்கதிகள் மட்டும்தான்.//
    //கெத்தேல் சாயபு’ என்கிற இஸ்லாமியரின்
    மாண்புகள் எதிரொலிக்க
    மெச்சி எழுதினார் என்பது
    நம்ப முடியாத செய்தி.
    எழுதியிருக்கிறாரே… என்றாலும்
    ஆத்மார்த்தமாக அவர் எழுதியிக்கவே மாட்டார்.//
  5. அநிருத்தன் said,

    24/02/2011 இல் 15:59
    பச்சக்கலர் கண்ணாடிய மாட்டிட்டு பாத்தா எழவு அப்பிடித்தாம்லே தெரியும் , இப்படியெல்லாம் எழுதினா இஸ்லாமிய எழுத்தாளர்களில் விவகாரமான ஆட்கள் மட்டுமே உண்டுன்னு முடிவு கட்டிட மாட்டாங்களா வாசகர்கள் ?
    ஆபிதீனய்யா , நீங்களாவது கொஞ்சம் வெசாரிச்சு பாத்து வெளியிட்டிருக்க கூடாதாங்க ? அந்த கதையில வற்ற ஆளு ஜெயமோகனில்லைன்னு ஆயிப்போச்சு.
    இப்ப தாஜ் மாண்புகள் எதிரொலிக்க
    மெச்சி எழுதினார் ஜெயமோகன்னு ஒத்துக்குவார்னு நெனைக்கறீங்களா ? காலத்துக்கும் கண்ணாடிய கழட்ட முடியாதா ஆளுக இவிக.
  6. அநிருத்தன் said,

    24/02/2011 இல் 16:04
    ஏம்வே பயப்படமாட்டாரு ? அதான் தாஜ் மாதிரி ஆளுக உண்டேவே ?
    //[ஆழமாக இவர்களை படித்தும் கூட நானும் மலையாளத்திலேயே இவர்களைப்பற்றி எழுத முடிந்துள்ளது . அதற்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை குறித்த என் அச்சமே காரணம் . மேலும் சிறு விமரிசனக்குறிப்பைக்கூட அபாயகரமாக திரித்துவிடும் அளவுக்கு எனக்கு இலக்கிய எதிரிகள் இங்கு உண்டு .]//
  7. 24/02/2011 இல் 16:29
    //கதைப்படி…
    காலேஜில் சேரும் அவரது வயது கணக்கு/
    (1968-ல் காலேஜில் சேர்ந்தேன் என்கிறார் ஜெயமோகன்.
    1962-ல் பிறந்த அவர்,
    1968-ல் ஆரம்பப் பள்ளியில்
    இரண்டாம் வகுப்பில்
    காலடியெடுத்து வைத்திருந்தாலே அதிகம்.)
    //
    ஏன் இப்படி? :(( அது அவரது சொந்தக் கதை என்று எங்கே குறிப்பிட்டிருக்கிறார்?
    ஒரு கதையை ‘தன்மை’யில் எழுதினால் அதை அந்த எழுத்தாளரின் சொந்தக் கதையாக வைத்து போட்டு தாளிக்கிறாரே…
  8. மணிசேகரன் said,

    24/02/2011 இல் 19:15
    ஜெயமோகன், கீரனூர் ஜாகிர் ராஜா என்ற இஸ்லாமிய எழுத்தாளரைப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரே? அது உங்கள் கண்ணில் படவில்லையா? அல்லது ஜாகிர் ஏற்கனவே இஸ்லாமிய சமூகத்தை விமர்சித்திருப்பதால் ஃபத்வா கொடுத்து காஃபிர் ஆகிவிட்டீர்களா?
  9. Jeyakumar said,

    24/02/2011 இல் 19:29
    இருப்பதை இருப்பது மாதிரி மட்டுமே பார்க்க விளையும் நண்பர்களைக் கூட கெடுத்து விடுவார் போல.. கதைய மட்டும் படிங்கய்யா..அதைவிட்டுப்புட்டு…
    ஆபிதீன் அண்ணாச்சி ஏன் இப்படி?
  10. maleek said,

    25/02/2011 இல் 03:22
    எகிப்து மம்மியின் வாயிலிருந்து வரும் ஈக்களைப் போல
    ஜெயமோகனுக்கு எழுத்து வரும் என்கிறார் சாரு.அவருடைய
    மொழிப்பிரவாகம் அப்படி.எழுத்தாளர்களுக்கு சமூகப்பொறுப்பு
    என்கிற ஈரவெங்காயமெல்லாம் சரி.(சென்ற வாரம் நடந்த
    விழாவொன்றில் கலைஞர் ஆட்சியை பொற்காலம் என்று
    நெகிழ்ந்து இருக்கிறார் ஜெயகாந்தன்)….தவிர, முஸ்லிம்,
    காபிர்,நரகம், இறுதிநாள், பத்வா….இது ஆபிதீன் பக்கமா?
    இல்லை வேறெதுவுமா?.
  11. தாஜ் said,

    25/02/2011 இல் 10:39
    ஜெயமோகனின் சோற்றுக்கணக்கை
    நான் விமர்சிக்க முனைந்த மாதிரி
    என் விமர்சனத்தை
    நண்பர்கள் விமர்சிக்கிறார்கள்.
    மெச்சுபவர்களை விட
    விமர்சகர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்.
    // ‘இவ்வளவுதானாய்யா உங்க அறிவு?
    ஒரு கதையை வாசிக்கும் விதம் இதாய்யா?’//
    அநிருத்தன் என்கிற நண்பர்
    என்னைக் குறித்து
    இப்படி நீட்டி முழங்கி சந்தேகிக்கிறார்.
    என்னத்தைச் சொல்ல….
    // ‘ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா’ //
    அன்னோனியமான அறிவுரை வேறு.
    *
    சம்பந்தப்பட்ட நண்பருக்கு
    ஜெயமோகனை
    எத்தனை வருடமாகத் தெரியுமென்று தெரியாது.
    கணையாழியில்
    ‘கிளிக்காலம்’ எழுதியக் காலம் தொட்டு
    ஜெயமோகனை தெரியும்.
    அவரது, மகா… கனமான ‘விஷ்ணுபுரம்’ நாவலை
    ஒரு முறைக்கு இரண்டு முறைப்படித்து
    என் விமர்சனத்தை நேரிடையாக
    அவரிடமே எடுத்துவைத்தவன் நான்.
    அவரது எழுத்து வல்லமையை குறித்தும்
    நண்பர் அநிருத்தனைவிட
    நன்கு அறிவேன்.
    சம்மந்தப்பட்ட
    சோற்றுக்கணக்கு குறித்து
    // வறுமையின் அழிச்சாட்டியம்..
    உறுத்தும் பசி..
    தனி மனித மாண்புகளென
    இதுகாரும் தீரப் பேசிய புனைவுகளில்
    சொல்லத் தகுந்த புனைவு இது.
    அத்தனைக்கு வளம்!// யென
    தீர்மானமானமாக
    என் கருத்தை முன்வைத்தப் பின்னர்தான்
    விமர்சன வரிகளில்
    கவனம் செய்தேன்.
    நண்பர் கவனித்திருக்க வேண்டும்.
    சோற்றுக்கணக்கு
    ஜெயமோகனுடைய
    சொந்த அனுபவம் இல்லை என்றும்
    அவரது நண்பர் உடையது என்றும்
    அநிருத்தன் சொல்கிறார்.
    ஒப்புக் கொள்வோம்.
    இணையத் தளத்தில் அவரது கதையை
    வாசிக்கும் நாழியில்
    அதைத் தீர உள்வாங்கிக் கொள்ளவே
    வாசிப்பவன் முயலுவானேயன்றி
    அது குறித்து, அவர் இணையத் தளத்தில்
    வேறு வேறு பக்கங்களில்
    அவர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் யென
    தேடித் திரிந்துக் கொண்டிருக்க மாட்டான்.
    நாளை…
    இந்தக் கதை நாளை
    அச்சில் தொகுப்பாக வரும்.
    அதில், அவர் அத்தகைய குறிப்புகளையெல்லாம்
    கட்டாயம் எழுதப் போவதும் கிடையாது.
    காலத்தின் பக்கங்களில் இருந்து வரும்
    வருங்கால வாசகன்
    இக்கதையை,
    அவரது அனுபவமென மயக்கம் கொள்ளக்கூடும்.
    அதில் தவறும் காணமுடியாது.
    இக்கதையில்
    தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாது
    நண்பரின் அனுபவமாகவே எழுதுவதற்கென்ன?
    (பிரச்சனையே அதுதான்)
    அப்படி எழுதினால் கதை சிறப்பாக அமையாதாயென்ன?
    ஜெயமோகனுக்கு தெரியாத இலக்கிய யுக்தியா?
    சுந்தர ராமசாமியையே
    உண்டு இல்லையென்று ஆக்கியவராச்சே!
    அநிருத்தனுக்கு தெரியாதுப் போனால்
    மூத்த இலக்கிய சகாக்களிடம் கேட்டறியணும்.
    நன்றி
    -தாஜ்
    *
    நண்பர் ஜமாலனுக்கு…
    ஜெயமோகனின்
    இலக்கிய அரசியல் எனக்குப் பிடிப்பதில்லை.
    அவரை ஏன் என்று கேட்பவரே கிடையாது.
    கேட்கத் தோன்றினாலும்
    ஒதுங்கிப் போவோர்களே அதிகம்.
    பொருக்க முடியாமல்தான் கேட்டேன்.
    புனைபெயரில்
    அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    எத்தனைப் பக்கத்திற்கு வேண்டுமாலும்
    ஜெயமோகனை பாராட்டி எழுதி
    அவரது இணையத் தளத்திற்கு அனுப்பலாம்
    பூரித்துப் போவார்கள்.
    ஆனால்,
    ஏன் என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது.
    *
    உங்களது பார்வைக்கும்/ எழுதியமைக்கும்
    நன்றி.
    – தாஜ்
  12. 25/02/2011 இல் 20:13
    // இக்கதையில்
    தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாது
    நண்பரின் அனுபவமாகவே எழுதுவதற்கென்ன? //
    இது என்ன விதண்டாவாதம்? எழுத்தாளர்கள் புனைவாக ‘தன்னிலை’யில் எழுதுவதே இல்லையா? அப்படி எந்த பிரதியும் விமர்சகர் படித்ததில்லையா? புனைவுக்கெல்லாம் விளக்கமாக ‘இது என் வாழ்க்கை குறிப்பல்ல’ என்று அடிக்குறிப்புப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?
    ஏன் ஒரு பெண் பாத்திரத்தின் பார்வையில் கதை சொன்னால் ‘ஜெயமோகன் எப்போது பாலின மாற்றுசிகிச்சை செய்து கொண்டார்?’ என்று சந்தேகபட்டுக் கொண்டிருப்பாரோ… கடவுளே!
    இதில் ‘என்னை அவருக்குப் பிடிக்காது’ என்று வேறு வருத்தப்பட்டுக் கொள்கிறார். மன்னிக்கவும்.. இப்படி மொண்ணையான விமர்சனப் பார்வையை வைத்துக் கொண்டு என்னைப் பிடிக்கவில்லை என்றால்… ஒன்றும் சொல்வதற்கில்லை.
  13. 27/02/2011 இல் 10:30
    கருத்து சொன்ன சகோதரர்கள் அநிருத்தன், ஸ்ரீதர், மணிசேகரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி. குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மவுத்தால் மனசு சரியில்லை. அதனால் பதிலெழுத தாமதம். மன்னியுங்கள். ’பச்ச கலர்’ கண்ணாடி மாட்டிக்கொண்டு படிப்பவரல்ல தாஜ்; அம்மாதிரி கண்ணாடி போட்டிருக்கும் முஸ்லிம்களால் இன்றுவரை புறக்கணிக்கப்படுபவர் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் நல்லது. ஒரு மாற்றுப்பார்வை; அவ்வளவுதான். இதிலென்ன இருக்கிறது? ’ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா’ என்றெல்லாம் சொல்வது தவறல்லவா? ஜெயகுமார், ’ஆபிதீன் அண்ணாச்சி ஏன் இப்படி?’ என்று கேட்காதீர்கள். என் தராசு சரியாகவே நிறுக்கும் – ஜானகிராமனின் கோதாவரிக்குண்டு கதையில் வரும் தராசு மாதிரி. அதில் பழைய பேப்பர்காரன் சொல்வான் : ‘நம்ம தராசு எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்யாசம் காட்டும் சாமி!’
  14. அநிருத்தன் said,

    28/02/2011 இல் 09:51
    //எழுதாத கார்டுக்கும் //
    இது கிறுக்கின கார்டல்லவே :)
    ஆபிதீன் , இப்படி வெங்கத்தனமான விமர்சன கட்டுரைகளை போட்டால் கதை படிப்பவன் விமர்சகளை பற்றி என்ன நினைப்பான் ?
    நீங்களாவது தன்னிலையில் ஏன் கதை எழுதப்படுகிறது என தாஜுக்கு விளக்கியிருக்கலாமே ?
    100 நாற்காலிகள் என ஜெயமோகன் அடுத்த கதை எழுதியிருக்கிறார் , அதுவும் ஜெயமோகனின் சொந்த அனுபவமா என தாஜை விளக்கச் சொல்லவும் ,
    ஆனாலும் இவரை எல்லாம் விமர்சனம் எழுதவிட்டு விமசனம் எனும் தரப்பையே அவமானப்படுத்துகிறீர்கள்
  15. 28/02/2011 இல் 16:23
    நண்பர் தாஜ் அவர்களுக்கு…
    ஜெயமோகனி்ன் இலக்கிய அரசியல் குறித்து நீங்கள் எழுதலாம். ஆனால், இது அவரின் சொந்தக்கதையா? சோகக்கதையா? என்கிற ஆராய்ச்சியில் எனக்கு உடன்பாடில்லை. அப்படியான விமர்சனம் எழுத்தைவிட எழுதுபவரின் சொந்த வாழ்வை பேசுவதாக ஆகிவிடும். பிறகு யாருமே புனைவு என்று எதையும் எழுதமுடியாது. பிரதி குறித்த விமர்சனமே சரி.
    //ஜெயமோகனின்
    இலக்கிய அரசியல் எனக்குப் பிடிப்பதில்லை.
    அவரை ஏன் என்று கேட்பவரே கிடையாது.
    கேட்கத் தோன்றினாலும்
    ஒதுங்கிப் போவோர்களே அதிகம்.
    பொருக்க முடியாமல்தான் கேட்டேன்.//
    இதெல்லாம் எதிர்பார்த்தே நீங்கள் எழுதவேண்டும். அந்த அர்ச்சனைகளை பாராட்டாகக் கொள்ளுங்கள். “எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவர்காளாகவே” நாம் இருப்போம். ஜெயமோகன் பற்றிய எனது விமர்சனம் ஒன்று மணல்வீடு என்கிற மாண்டோ சிறப்பிதழில் வருகிறது. வந்தபின் அதை பதிவிடுகிறேன். நானும் “நல்லவன்தான்” என்பதை நீங்கள் அப்போ புரிந்து கொள்ளலாம். சோற்றுக்கணக்கில் உள்ள நாட்டுக்கணக்கு பற்றிய கட்டுரையை எழுதி ஆபிதீன் காக்கா-சாருக்கு தான் அனுப்பலாம் என்று உள்ளேன். பதிவிட. அப்போ பார்க்கலாம்.
    //புனைபெயரில்
    அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    எத்தனைப் பக்கத்திற்கு வேண்டுமாலும்
    ஜெயமோகனை பாராட்டி எழுதி
    அவரது இணையத் தளத்திற்கு அனுப்பலாம்
    பூரித்துப் போவார்கள்.
    ஆனால்,
    ஏன் என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது.//
    நன்றி
    *
    //உங்களது பார்வைக்கும்/ எழுதியமைக்கும்
    நன்றி.
    – தாஜ்//
  16. 28/02/2011 இல் 19:17
    //// இவ்வளவுதானாய்யா உங்க அறிவு?
    ஒரு கதையை வாசிக்கும் விதம் இதாய்யா ?
    ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா .
    எனக்கு ஆபிதீனை பாத்தா பாவமா இருக்கு .
    பச்சக்கலர் கண்ணாடிய மாட்டிட்டு பாத்தா எழவு அப்பிடித்தாம்லே தெரியும்
    ஏம்வே பயப்படமாட்டாரு ? அதான் தாஜ் மாதிரி ஆளுக உண்டேவே ?
    ஆபிதீன் , இப்படி வெங்கத்தனமான விமர்சன கட்டுரைகளை போட்டால்///////
    ஏம்வே அநிருத்தன், இப்டில்லாம் எலுதுறது என்னதனம்வே?
    எதுக்குவே அனாமத்து எலக்கியம்?
    அவுரு அப்டி என்னதாஞ்சொல்லிப்போட்டாருவே?
    என் பாஷைக்கு வந்துர்றேன்..
    தாஜ் சொல்ல வந்தது மிக நுட்பமான ஒரு விஷயம். புனைவையும் உண்மையையும் ஒரு மாதிரி கலந்து குழப்பி, பிற்காலத்தில் அது உண்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமோ என்ற அவரது ஐயத்தைத்தானே சொல்கிறார்?
    அப்படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டியே இது போல புனையப்பட்டிருக்கிறது என்று குற்றமும் சாட்டுகிறார்.
    அதுவும் ஒரு இலக்கியப் படைப்பைப் பற்றி ஒரு விமர்சனம் என்ற அளவிலேயே அதை முன்வைத்திருக்கிறார்.
    அதோடு அந்தப் படைப்பாளியின் “நோக்கம்” எந்த அளவுக்கு நேர்மையானது என்றவொரு கேள்வியையும் எழுப்புகிறார். நேரிடையாக.
    இதெல்லாம் என்ன தெய்வக்குத்தமா? எதுக்குவே இம்புட்டு கோவம், அர்ச்சனை? ஒரு விமர்சனத்துக்கு பதில் எழுத எதுக்கு ஒளியனும்? இது வெங்கத்தனமில்லயா? (பொட்டைத்தனமோ?) நேரா வாதம் செய்யலாம்லா?
    சொந்தப் பெயரில் எழுதும் தாஜ், நீர் இம்புட்டு அர்ச்சித்தும் உம்மை “ஒரு அனாமத்து”ன்னு கூட சொல்லலை. கவனிச்சீரா?
    அதுதாம்வே நீர் சொன்ன “”””தாஜ் மாதிரி ஆள்”””””.
    கண்ணாடியே போடாத தாஜப்பாத்து பச்சக்கண்ணாடிங்கிறிரு;
    போய் வைத்தியம் பாத்துக்கிரும்வே.
    இல்லைனா காவிக்கண்ணாடியவாவது கழட்டி வையும்.
    அப்புறம் இன்னொரு விஷயம்: ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களைப் படித்து மலைத்து மலைத்து ரசிக்கும் கூட்டத்துலதான் நான் இன்னும் இருக்கேன். ஆனாலும் அதுக்காக ஒரு நெருடலும் அவர்மீது வரக்கூடாதுன்னு இல்லையே? அவரது வலைப்பக்கத்தில் முதன்முதலில் “அறிமுகம்” பார்த்தபோதே அது வந்தது. ஒரு இரண்டு வருடக்காலக்கட்டத்தில் அவர் அடைந்த இருவேறு நிலைகளின் மிகப் பெரிய முரணைச் சொன்னபிறகு, (இது புனைவுன்னோ, நண்பரின் சரிதம்னோ எந்த ஃபோர்ரத்துலயும் சொல்லிருக்க மாட்டருவே?) அவரின் தற்போதைய நிலைப்பாட்டைச் சொல்லவில்லை. தெளிவிக்கவில்லை. ஏன்? தெரிஞ்சா அனாமத்தாவே சொல்லும்வே! கீழே உள்ளத படிச்சுட்டு!!
    //1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.
    என் உயிர் நண்பனாக இருந்த ராதாகிருஷ்ணனின் தற்கொலை என்னை அமைதியிழக்கச் செய்தது. இக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மீக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது. ஆகவே துறவியாக வேண்டுமென்ற கனவு உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்திருக்கிறேன். திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். பல சில்லறைவேலைகள் செய்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் தொடர்பும் இக்காலகட்டத்தில் அவ்வப்போது இருந்தது. 1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஆர்வமும் பங்களிப்பும் ஏற்பட்ட காலம். அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது.//
  17. அநிருத்தன் said,

    01/03/2011 இல் 17:32
    மஜீது அண்ணே ,
    ஜெயமோகன் என்னதையாம் எழுதினு போகட்டும் வாழ்க்கை குறிப்பில , அதைபத்தி நான் பேசலை ,
    ஆனாலும் அநியாயத்துக்கு புனைவை இப்படி விமர்சனம்ங்கற பேரால காமடி செஞ்சா கடுப்பாகாதோ ?
    நியாயமா இந்த கேள்வியை ஆபிதீனே கேட்டிருக்கணும் , காமடியா போகட்டும்னு இங்க போட்டுட்டார் , இனி தாஜ் எதை எழுதினாலும் கிண்டலாத்தானே பாப்பம் ? அதைதான் சுட்டினேன்.
  18. 02/03/2011 இல் 08:24
    அன்புள்ள ஆபிதீன்,
    நீங்கள் என்னுடைய சோற்றுக்கணக்கு கதையைப்பற்றி ஒரு அபத்தமான கட்டுரையை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஒருபோதும் அப்படி எழுதமாட்டீர்கள் என நான் சொன்னேன். இல்லை எழுதியிருக்கிறார் என்று இந்த இணைப்பை அனுப்பினார்கள். உங்கள் மேலுள்ள மதிப்பால் அதை பார்த்தேன். ஆம்,நீங்கள் எழுதவில்லைதான், ஆனால் ஒரு மதவெறியரின் அபத்தமான கடிதத்தை வெளியிட்டதன் வழியாக என் மதிப்பில் மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
    இன்றுவரை உலக அளவில் எழுதப்பட்ட புனைவுகளில் ஏறத்தாழ நேர்ப்பாதி ’நான்’ என்ற தன்மைநிலையில் நின்றுகொண்டு சொல்லப்படுபவை. அவற்றில் சில ஆசிரியரே கூறுவதாக இருக்கும். பெரும்பாலானவை கதாபாத்திரத்தின் கூற்றுக்கள். என் எழுத்தில் அப்படி கதாபாத்திரத்தின் குரலில் பேசும் கதைகள் ஏராளமாக உள்ளன. சமீபத்தில் வெளிவந்த அனல்காற்று, இரவு, உலோகம் போன்ற நாவல்களேகூட மையக்கதாபாத்திரத்தின் குரலில் பேசும் நாவல்கள்.
    ஒருகதை பல இடங்களிலாக தாவிச்செல்வதாக இருந்தால் கதைக்கு ஒருமையை கூட்ட தன்னிலை உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஒருகதாபாத்திரத்தின் அகவயமான பயணத்தை முன்னிலைப்படுத்தவும் அவ்வுத்தி உதவுகிறது.. நாலைந்து கதைகளை படித்த அனுபவம் உள்ள ஒருவருக்கே புரியக்கூடிய விஷயம் இது.. ஒருகதையை சில பத்திகள் படிப்பதற்குள்ளாகவே அது எந்தகதாபாத்திரம் என தெளிவாக வாசகன் புரிந்துகொள்ளமுடியும். சோற்றுக்கணக்கு கதையில் அது அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.
    அதை உணரும் அறிவுத்திறன் எழுதியவருக்கு இல்லாமலிருக்கலாம். உங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
    மதம் சார்ந்த இனம் சார்ந்த அடையாளங்களுக்குள் எழுத்தாளனின் அகம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இது எனக்கு எப்போதும் நான் சொல்லிக்கொள்வது, உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்
    ஜெ
  19. 02/03/2011 இல் 08:55
    ஆபிதீன்,
    ஒரு தனிப்பட்ட குறிப்பு. தாஜ் என்பவர் ஒருகாலத்தில் எனக்கு சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதிகமும் மதவெறி தொனிக்கும் கடிதங்கள். அன்றைய என் மனநிலையில் கொஞ்சநாள் அக்கடிதங்களுக்கு நிதானமாக விளக்கி பதில்கள் போட்டேன். இன்றென்றால் ஒருபோதும் மதவெறியுடன் உரையாட முயலமாட்டேன். பின்னர் விட்டுவிட்டேன். ஆனால் என்னை தனிப்பட்டமுறையில் தெரியும் என இவர் இன்று மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரு கூட்டத்தில் ஹலோ சொன்னதுக்கு மேலாக இவர் முகம் எனக்கு அறிமுகம் இல்லை. உங்கள் இணையதளம் மூலம் மீண்டும் இந்த அபத்தமான பொய் நிலைநாட்டப்படுகிறது. அதற்கும் என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.
    உங்களைப்பற்றிய என் நம்பிக்கை தகர்ந்தது சமீபத்தைய பெரும் வருத்தங்களில் ஒன்று
  20. 02/03/2011 இல் 10:03
    இரண்டு நண்பர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்!
    //உங்களைப்பற்றிய என் நம்பிக்கை தகர்ந்தது சமீபத்தைய பெரும் வருத்தங்களில் ஒன்று// உங்கள் மேலுள்ள நம்பிக்கையும் பிரியமும் எனக்கு குறையாது. வருகைக்கு நன்றி ஜெ.
  21. raam.srini said,

    02/03/2011 இல் 11:36
    தாஜ்,
    உங்களுக்கு தெரியாத மற்றொரு ரகசியம் ஜெ.மோ பற்றி…அவர் சுமார் முப்பது வருடங்கள் மலைப்பிரதேசங்களில் வெள்ளைக்கார துரைகளுக்கு அடிமையாக ஊழியம் செய்துள்ளார்..ஆதாரம் அவரது ஊமைச்செந்நாய் கதை..படிக்கலைங்களா…(பிறப்புக்கணக்கு போட்டுப் பார்த்தால் அவர் பிறக்கும் முன்பிருந்தே இதை செய்து வந்ததுபோலத் தெரிகிறது..)
    ‘நான்’ என்று எழுதுவது கதை சொல்லும் உத்தி என்றே புரியாமல் ஒரு ‘விமர்சனம்’ (வியாக்கியானம்!!!)..இதில் விஷ்ணுபுரம் படித்து அவரிடமே நேரடியாக விவாதித்த ‘வரலாறு’ உடையவன் என்ற தொடைதட்டல்கள் வேறு..
  22. Henry said,

    02/03/2011 இல் 13:14
    அந்த கதையில் வருவது நான்தான் என்று சொல்லாத ஒரு எழுத்தாளரை பிடித்து, அது இவர்தான் என்று தப்பாக நினைத்துக்கொண்டு, பின்னர் கதையைப் படித்தால் அவரைப் போல இல்லையே என்று எழுதுவது, இதுவரை நான் படித்த நகைச்சுவையிலேயே உச்ச கட்டம்!
    அடப்பாவிகளா, என்னைப்போன்ற பாமரமக்கள் எல்லாம் உங்களைப்போன்ற ப்ளாக்கர்களைப் படிக்கிறோம் என்கிற உணர்வுகூட இல்லையா?
    இந்த கருமத்துக்கு இலக்கிய விமர்சனம்-னு பேரூ வேற!
    இதுக்கு வேலயத்துப்போய் அந்த எழுத்தாளர் பதில் சொல்லியிருக்கார்!
    இலக்கிய விமர்சகர் அப்படிங்கிற வேலைக்கு இதைவிட பெரிய அவமானத்த அசிங்கத்த வேறு ஒருத்தர் இனிமே செய்ய முடிமாங்குறது சந்தேகம்தான்.
  23. சபரீசன் said,

    02/03/2011 இல் 14:15
    தாஜ் அவர்கள் பெரியாரியர் போல சொல்கிறார்கள் , ஆனால் இந்த கட்டுரையில் தெரிவது அவருடைய மதசாய்வுதான்.
    வைக்கம் முகமது பஷீரை பற்றி தமிழில் தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன் , தோப்பில் முகமது மீரானின் படைப்புகளை தொடர்ந்து தமிழின் சிறந்த நாவல்களாக முன்னிருத்துகிறார் , மனுஷ்ய புத்திரனின் வியாபார குயுக்த்திகளைத்தான் வெறுக்கிறார் , அவர் கவிதைகளை அல்ல .
    அடுத்த தலைமுறை எழுத்தாளராக ஜாகீர்ராஜாவை சொல்கிறார் , இதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயமோகனுக்கு முஸ்லீம்களை பிடிக்காது என்று சொல்வது மதவெறி கண்ணோட்டமின்றி வேறென்ன ?
  24. சபரீசன் said,

    02/03/2011 இல் 14:16
    இவர் விஷ்ணுபுரத்தை விஷ்ணுபுராணம் என்று நினைத்து படித்து அதிலும் மதவெறியை கண்டிருப்பார் என நினைக்கிறேன்
  25. Jeyakumar said,

    02/03/2011 இல் 15:43
    //ஜெயகுமார், ’ஆபிதீன் அண்ணாச்சி ஏன் இப்படி?’ என்று கேட்காதீர்கள். என் தராசு சரியாகவே நிறுக்கும் – ஜானகிராமனின் கோதாவரிக்குண்டு கதையில் வரும் தராசு மாதிரி. அதில் பழைய பேப்பர்காரன் சொல்வான் : ‘நம்ம தராசு எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்யாசம் காட்டும் சாமி!’//
    இது உங்களின் கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தளத்தில் இப்படி ஒரு மோசமான பர்வையில் ஒரு அலசல் வந்ததற்குத்தான் கேட்டேன். அதற்கு எனது தராசு சரியாகவே நிறுக்கும் என சொல்லி விட்டீர்கள். நன்றி.
    எனக்கு நம்பிக்கையெல்லாம் தளர்ந்து போகும் அளவு ஏதும் உங்களிடம் ஏதுமில்லை எனினும், நல்ல கட்டுரைகளை அருமையாய் எழுதும் வலைப்பதிவர்களில் ஒருவர் இப்படி எல்லாமா தனது தளத்தை பயன்படுத்துவது என்ற ஆதங்கத்தில் சொன்னது எனது கருத்து. இனிமேல் பிடித்ததை மட்டும் படித்துவிட்டு சென்று விடுகிறேன்.
    நன்றி.
    ஜெயக்குமார்
    • abedheen said,

      02/03/2011 இல் 16:13
      அன்பு ஜெயக்குமார், என்ன இப்படி புரியாமல் பேசுகிறீர்கள்? நான் செய்தது ஒரு கிண்டல். எனக்கு பிடித்த நகைச்சுவை அது. ‘பழைய பேப்பர்காரன் தராசு தெய்வீகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும்; ஆறுமாச தினசரிக் காகிதம் எந்த மூலை?’ என்பார் ஜானகிராமன் கதையின் நாயகன். எனக்கு யார்மேலும் வெறுப்போ கோபமோ இல்லை.
  26. rameshk said,

    02/03/2011 இல் 18:00
    // ’விமர்சகனின் பார்வையில்’ சிறந்த நாவல்களில் ஒன்றாக தோப்பில் முகமது மீரானுடையதைச் சொன்னாலும், குறிப்பிடவேண்டிய நண்பர்களான ஜாகீர்ராஜாவையும் , மீரான்மைதீனையும் அவ்வப்போது குறிப்பிட்டாலும் பொதுவாக தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை (மனுஷ்யபுத்திரன் முஸ்லிமா என்று தெரியவில்லை!) ஜெயமோகன் கண்டுகொள்வதில்லை என்பது உண்மைதான்.
    இது ஆபிதீன் அவர்களின் குற்றச்சாட்டு. சரி.. அடுத்த வரி…
    ///ஆனால் ’தோப்பிலை’த் தவிர்த்து (படைப்பிலக்கியத்தில் ) யாரும் தொடர்ந்து இயங்குவதில்லையே.. நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.
    என்ன சொல்ல வரிங்க ஆபிதீன். தொடர்ந்து எழுதாவிட்டாலும் ஜெயமோகன் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை பற்றி சும்மா ஏதாவது எழுதணுமா? :)
  27. rameshk said,

    02/03/2011 இல் 18:26
    ////////////இலக்கிய ஆர்வம் கொண்ட
    இஸ்லாமிய இளவல்களின் எண்ணிக்கை
    அவருக்கு வியப்பூட்டியிருக்கலாம்.
    அதையொட்டி
    அவரது வாழும் வியாபார ஞானம் விழித்துக்கொண்டிருக்கலாம்.
    அவர்களை தன் வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கும் முகமாக
    அவர் கேள்விப்பட்ட
    ‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக் கடையை
    இக்கதையில்
    மிகச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டிருக்கலாம்../////////////
    “வியப்பூட்டியிருக்கலாம், விழித்துக்கொண்டிருக்கலாம், பயன் படுத்திக்கொண்டிருக்கலாம்” …. அடா .. அடா.. அடா.. என்ன ஒரு ஆதாரமற்ற, வெட்கங்கெட்ட வறட்டு கற்பனை விமரிசனம்?
    ////////நான்,
    அவரது பெரும்பாலான கதைகளை
    வாசித்தவன் என்கிறவகையில்
    இஸ்லாமிய கதாபாத்திரங்கள்
    அவரது கதைகளில்
    சொல்லும் அளவில் இருந்தது இல்லை.
    இத்தனைக்கும் அவர்
    சாதி/ மத/ இன/ பேதம் பாராட்டாத
    நாராயண குருவின் வழி பேணுபவர்
    ஆனாலும் இஸ்லாமியன் என்றாலே
    இவருக்கு ஏனோ ஆவதில்லை..
    இஸ்லாமியர்களில்
    நல்லவர்களே இல்லை என நம்பும்
    நல்லவர்களுக்கு மட்டுமே இவர் நண்பர்.
    இஸ்லாமியர்களின் நிஜங்களுக்கு குரல் கொடுத்து
    அவர்களுக்கு ஆறுதலாக அவ்வப்போது
    மீடியாக்களில் வழக்காடி வரும் பேராசிரியர். அ.மார்க்ஸை,
    அதற்காகவே கண்டித்தவர் இவர்.
    அப்படியான ஜெயமோகன்
    இன்றைக்கு…
    ‘கெத்தேல் சாயபு’ என்கிற இஸ்லாமியரின்
    மாண்புகள் எதிரொலிக்க
    மெச்சி எழுதினார் என்பது
    நம்ப முடியாத செய்தி.
    எழுதியிருக்கிறாரே… என்றாலும்
    ஆத்மார்த்தமாக அவர் எழுதியிக்கவே மாட்டார்.
    அது அவருக்கு வராது.
    அப்படியொரு பார்வையே அவருக்கு கிடையாது////////////////////
    அ.மார்க்ஸ் தான் ஜெயமோகனை இந்துத்துவ வெறியர் என்று எங்கும் கூறுகிறார் …அ.மார்க்ஸ் அவர்களின் கருத்துக்களையே ஜெமோ விமர்சித்து நான் படித்திருக்கிறேன். அவரது மதத்தை எங்கும் குறிப்பிட்டதில்லை..
    தாஜ் அவர்களை ஜெயமோகன் விளித்திருக்கும் விதம் முற்றிலும் சரி..
  28. Ram said,

    03/03/2011 இல் 08:55
    You both guys (Abidheen & Taj) should be ashamed of yourself. It is such a simple storytelling technique and you can’t take them straight ?
    No wonder everybody disagrees with your views.
  29. Jeyakumar said,

    03/03/2011 இல் 10:40
    //அன்பு ஜெயக்குமார், என்ன இப்படி புரியாமல் பேசுகிறீர்கள்? நான் செய்தது ஒரு கிண்டல். எனக்கு பிடித்த நகைச்சுவை அது//
    சரி, சரி..
    கோதாவரி குண்டு கிடைச்சா எனக்கு அனுப்புங்களேன்..
    ஜெயக்குமார்
  30. radhakrishnan said,

    09/03/2011 இல் 15:43
    sorry,abitheen,
    you sacrificed ur quality for the sake of friendship..