Monday, April 18, 2016

பொற்செல்வன், அருண், வேல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
உங்களுடைய அறம் படித்து முடிந்து பிறகு ஒவ்வொரு ஆளுமைகள் ஏதோ எண்ணகளுக்கு உட்படுத்தினர் உங்கள் எழுத்து நடை மிக அருமை. அடுத்து உங்கள் மகத்தான படைப்புகளான விஷ்ணுபுரம், ரப்பர் படிக்க அதிக அவா கொண்டு இருகிறேன் .. நீங்கள் நலமாக,  நல்ல படைப்புகளை கொடுக்க எனது வாழ்த்துகள்.

நன்றி
இரா.பொற்செல்வன்

அன்புள்ள ஜெ

உங்கள் அறம் கதைகளை ஒரு நண்பர் எனக்கு அளித்தார். நான் முன்னரே உங்கள் பல கதைகளை படித்திருந்தாலும் அறம் தொகுதியின் கதைகள் அளித்த மன எழுச்சியை அளவிடமுடியாது. உண்மையில் அவை அறத்தை அடைந்து அறிவிக்கும் கதைகள் அல்ல. அவை அறம் அழிந்துகொண்டிருக்கும் ஒருகாலகட்டத்துக்கான கதைகள் என்று தோன்றுகிறது. அறத்துக்காகத் தேடித்தவித்துக் கண்டடையும் கணம் அக்கதைகளில் உள்ளது. அந்தக்கண்டடைவதென்பது சிலசமயம் ஒரு மாயை. சிலசமயம் ஒரு வரலாறாக உள்ளது. அல்லது விதிவிலக்காக உள்ளது. அதாவது அறம் திகழும் சமூகத்தை இந்தக்கதைகள் காட்டவில்லை. அறம் மார்ஜினலைஸ் செய்யப்பட்டுவிட்ட ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்றன இக்கதைகள்.

ஆகவே வாசித்தபின் நிறைவோ மகிழ்ச்சியோ உருவாகவில்லை. சோர்வும் துக்கமும்தான் ஓங்கி நின்றது. சொல்லத்தெரியவில்லை. நானே விரிவாக எழுதவேண்டும் என நினைத்து ரொம்பநாள் வைத்திருந்தேன். இப்போதுதான் எழுதினேன். அறம் ஒரு முக்கியமான தொகுப்பு. நம் வெற்றிகள் என்ன என்பதனால் அல்ல, நம்முடைய தோல்விகள் என்ன என்று அது காட்டுவதனால் என்று சொல்வேன்

அருண் பிரதீப்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் அறம் கதைகளை வாசித்தேன். அதில் மயில்கழுத்து என்பது என்னை மிகவும் கவர்ந்த கதை. ஆனால் அது ஏன் அறம் தொகுதியில் வருகிறது என்று மட்டும் புரியவில்லை. நெடுநாள் கழித்து இப்போது வாசித்தேன். அது மிகச்சிக்கலான கதை. உணர்வு எழுச்சி மட்டும் அல்ல. அது காட்டும் காமத்தின் உளவியல் முக்கியமானது. காமம் ஒரு பெரிய விஷயம். அதிலே பெரிய அளவில் வன்மமும் குரூரமும் உள்ளது. அதையெல்லாம் கலைஞன் சந்திக்கமுடியாது [நான் என் அனுபவத்தை கடிதமாக எழுதியிருந்தேன். ஞாபகமிருக்கலாம்] அதன் முன் தோற்றுவிடுகிறான் கலைஞன். அவன் அதிலிருந்து கலைவழியாக எழுகிறான். அல்லது எழுவேன் என்று சொல்கிறான். அவவ்ளவுதான் கதை. அது அவனுடைய அறம். அதுதான் இலக்கியத்தின் அறம் என்று நினைத்துக்கொண்டேன்

வேல்

அறம் அனைத்து விவாதங்களும்

Monday, March 9, 2015

மத்துறு தயிர்- சரவணக்குமார், செல்வா

அன்பு ஆசிரியருக்கு,

அறம் வரிசை கதைகள் ஒவ்வொன்றும் பல முறை படித்தாகி விட்டது.  மத்துறு தயிர் ஒரு நூறு முறையாவது!
(கிட்டத்தட்ட நான் அனுபவித்த வேதனை என்பதாலா என்று தெரியவில்லை)

ராஜம் அண்ணாச்சி யார் என்று யூகிக்க முடியவில்லை. அந்த நாயர் பெண்ணும் யாரென்று ஒரு ஆயிரம் பேரிடமாவது வினவி இருப்பேன்! உயிர் பிரிந்தது போல ராஜம் அந்த பெண் ஊரை விட்டு சென்றதும் துடித்தது, பேராசியர் ராஜம் குறித்து பட்ட வேதனை, ராஜம் அண்ணாச்சியின் தந்தை அம்மன் முன்பு கையை வெட்டி ரத்தம் ஊற்றி அழுதது, பேராசிரியரை எதிர்கொள்ள முடியாமல் ராஜம் பட்ட வேதனை, ஒவ்வொன்றையும் பல நூறு மடங்கு துல்லியமாக உணர்ந்து ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் கண் கலங்கி இருக்கிறேன்!

உண்மையாக இருந்தவர்களில், மீள முடியாமல் மூழ்கியவர்களே அதிகம்! மீண்டு வந்து விடுதல் ஒரு பெரும் வெற்றி உணர்வையும்,  இறுமாப்பையும் அளித்தாலும், இறப்புவரை உள்ளுக்குள் ஒரு முள் குத்திக்கொண்டே இருக்கும் போலும்!

தாழ்மையுடன்,
சரவணகுமார்.


ஜெ

நீண்ட இடைவேளைக்குப்பின் மத்துறுதயிர் கதையை மீண்டும் வாசித்தேன். அது குருசீட உறவின் கதை மட்டும் அல்ல. இரண்டுவகையான உணர்ச்சிநிலைகளின் கதை. உணர்வுரீதியாக வாழ்க்கையைப்பார்ப்பதற்கும் சமநிலையாக வாழ்க்கையைப்பார்ப்பதர்கும் இடையே உள்ள வேறுபாடு

எனக்கு என்ன தோன்றுது என்றால் ஒருவருக்கு உணர்ச்சிபூர்வமாக தன் வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் உரிமை உண்டு என்றுதான்

செல்வா

<a href="http://aramstories.blogspot.in">அறம் அனைத்துக் கடிதங்களும் </a>

Friday, February 27, 2015

ஓலைச்சிலுவை-கடிதம்

அன்பு அண்ணா 

நாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்தும் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம்.  அவர்கள் வாழ்வின் மெய்மை  நம்முள்  எங்கோ படிந்து விடுகின்றது . ஆனால் அவர்களை போன்ற ஒரு புற வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்த போதிலும்,  அகத்தே நம்மால் அவர்களை எளிதில் சென்றடைய இயல்வதில்லை . அதற்காக அவர்களை விட்டு விலகவும் முடியாது .நம் ஆன்மா விழித்தெழும் தருணம் வாய்க்கும் வரை அவர்களின் சொற்கள் சொற்களாகவே எஞ்சும். அத்தருணம் வரை  அவர்களை பின்தொடரும் உலோக பொம்மையாக வாழ்வதை , நம் ஆளுமை  புரளாதிருப்பதை ஆழ்மனம்  அவமதித்து கொண்டே இருக்கும் .ஒலைச்சிலுவை கதையில் தந்தையின் மரணத்திற்கு பின்பு  கஞ்சிக்கு வழியில்லாததால் சாகவிருந்த  குடும்பத்தை  காப்பற்ற டாக்டர்  சாமெர்வெலின் கிறிஸ்துவத்துக்கு  மாறும்  ஜேம்ஸ் டேனியலின்  வாழ்வை போல்.   

உலகப் போரில் பகடைகளாக நகர்த்த பட்டு சிதைத்து கொல்லப்பட்ட எளிய மனிதர்களின் ஆன்ம வல்லமை  புவியெங்கும் எத்தனை  ஆளுமைகளை விதைத்திருக்கிறது? உலகம் யாவையும்  காரி டேவிஸ் போன்றே டாக்டர் சாமெர்வெல்லும் உலகப்போரில் எளிய மனிதனின் மகத்துவத்தை கண்டுகொள்கிறார் .  இமயப்பயணத்தின் இழப்பின் அதிர்வு. பின்பு  நெய்யூர்  மருத்துவமனை  வாயிலில் கந்தல் அணிந்த சிறுமி  அளிக்கும்  ஓலைச்சிலுவை.  இந் நிகழ்வுகளால் உலுக்கப்பட்டு தனது  செல்வங்கள் அனைத்தையும் விற்று   நெய்யூர்  மருத்துவமனையை விரிவுப்படுத்துகிறார்.  நெய்யூர் மக்களுக்காக  வாழ்வை அர்ப்பணிக்கிறார். 

சாமர்வெல்  போன்ற  மாமனிதர்களின்  அருகாமையில்  இளமையை வாழ்வது  பெருவரம். குருவின்  பாதங்களில் வாழ்வது. எட்டாவது வயதில் தந்தையின்  மரணத்திற்கு பிறகு  சாமெர்வெலால் மீட்கப்பட்டு அவருடன் வாழ்கிறான் டேனியல் . சில ஆண்டுகளில் அவன்  சூழல் புறத் தோற்றம் என எல்லாம்  மேம்படுகிறது.  சோற்றுக்காக வேதத்திற்கு மாறிய சிறுவனின் நோக்கம் நிறைவுறுகிறது .

புறவுலகிற்கு  சாமெர்வெல் போல தோற்றம் அளிப்பினும் அவன்  உள்ளுக்குள் புரளவே வில்லை. கடவுளின் துளியை அவன் ஆன்மா கண்டடையவில்லை என்பதை உணர்ந்து உள்ளூர அவமதிக்கப்  படுகிறான். சாமெர்வெலின் ஓபோ இசை மட்டும் தான் அவன் ஆன்மாவை தீண்டுகிறது.

தன்   சீடனின் அகத்தை  எளிதாக அறிந்து கொள்கிறார் குரு . அவனைத்  தன்னில் இருந்து விளக்க விளைகிறார் .  குருவின்  அருகில் இருந்து அடைய இயலாத  ஒன்றை எங்கு சென்று தேடுவது ?  சாமெர்வெலிடமே தன்  அகத்தை விளக்குகிறான்.   குருவுடன்  வாழ்வது  நரகமே எனினும் அவர் பாதங்களே சரண். அவரை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறான்.

காலரா தாக்கி பிணக்காடாக கிடக்கும் குமரி மாவட்டம் . கிருஷ்ணன் கோவிலில் காலராவுக்கு மகவுகளை  பலிகொடுத்ததால்   சாகவிளையும் அன்னையை துயரில் இருந்து சாமெர்வெலின் சொற்கள் மீட்கிறது . பித்துக்கொண்டவள் போல் அவள் சாமெர்வெலின் பாதங்களில் மண்டியிட்டு அழுகிறாள்.  அதைக்காணும் டேனியல் தளர்கிறான். அவனது ஆன்மாவில் கிறிஸ்துவின் துளி ஒன்று வீழ்கிறது.  

தன்  தந்தையின் மரணத்தின் வழியே தனக்களிக்கப்பட்ட ஒலைச்சிலுவையை  தவறவிட்ட டேனியல் இம்முறை அதை இறுகப்பற்றிக் கொள்கிறான் .  


பிரபு 

Wednesday, January 28, 2015

ஓருலகம்- கடலூர் சீனு



<strong>மழை தரும் விண் என் தந்தை,

வளம் தரும் மண் என் தாய்,

நான் இந்த பூமியின் மைந்தன்...</strong>

                                                                           [பழம்பாடல்  ஒன்று]


இனிய ஜெயம்,

மிக சமீபத்தில் ஒரு சம்பவம். அவர் ஒரு சாமியார் .இல்லறத் துறவி. நான் அத்து அலைந்து கொண்டிருந்தபோது பழக்கமானவர்களில் ஒருவர். புதுவை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவர் அடிக்கடி ஊழ்கத்தில் ஆழ்ந்துபோவார் அந்நிலை சில சமயம் இரு நாள் கூட நீடிக்கும். பெயர் பரவி. சிறு சிவன் கோவில் ஒன்று நிறுவினார். அனைத்துக்கும் மேல் அவர் பெயர் பரவ முக்கிய காரணம், அவர் பல வருடங்களாக கையில் காசே தொடுவதில்லை. அதை ஒரு விரதமாகவே ஏற்று வாழ்ந்தார்.  நல்ல தேஜஸ்.புகழ்.கம்பீரம். சில மாதங்கள் முன்பு சில நண்பர்கள் அவரை காசிக்கு அழைத்து சென்றார்கள். அவர் எதோ சுடுகாட்டில் ஊழ்கத்தில் அமர்ந்து விட்டார். நண்பர்கள் அவரை எழுப்பி பார்த்தார்கள். அவர் அசைவதாக இல்லை.  சரி சாமியார் அப்படித்தான் என்று சமாதனம் ஆகி, அவர்கள் மட்டும் ட்ரைன்ஏறி புதுவை வந்து விட்டனர். சாமியின் மனைவிக்கும் பெரிய கவலைகள் இல்லை. ஐந்து நாள். சாமி கதறியபடி வீடு வந்து சேர்ந்தார். ஊழ்கம் கலைந்த சாமி 'கைவிடப் பட்டது ' அறிந்து கத்தி கதறி கூப்பாடு போட்டு காவல் துறை உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார்.

மனைவியைக் கண்டதும்  காணாமல் போன கைப்பிள்ளை அன்னையைக் கண்டது போல ஏங்கி ஏங்கி அழுதார். ஒரு வாரம் அழுதார். பேச்சு இல்லை.உணவு இல்லை. அழுகை மட்டுமே. பத்து நாள் நல்ல காய்ச்சல். சரியாக இருபதாவது நாள் இறந்துபோனார்.

சமணத் துறவியாக வாழ்ந்து அதிலிருந்து விலகிய சதீஷ் குமார். எதோ ஆற்றல் உந்த உலக சமாதானத்தை வலியுறுத்தி உலக நடை பயணம் கிளம்புகிறார். அப்போது அவரது குரு மகாத்மா பூலே அவருக்கு ஒரு கட்டளை விதிக்கிறார் அது. கையில் காசு எடுத்துக் கொள்ளாதே. அடுத்த வேளை உணவை சேமித்துக் கொள்ளாதே. எனும் இரு கட்டளைகள். சதீஷ் புறப்படுகிறார். ஆம் கையில் பைசா இல்லாமல், அடுத்த வேளை உணவு இல்லாமல், தொடர்பு மொழி இல்லாமல் புறப்பட்டு , முக்கிய உலக நாடுகளின் பிரதமர்கள் ,பேட்ரண்ட் ரசால் போன்ற சிந்தனையாளர்கள் அனைவரையும் சந்தித்து  தனது கருத்தை முன் வைத்து விட்டு பல வருட பயணத்தை இமயமலையில் வந்து முடிக்கிறார்.

உலகம் யாவையும் கதையில் சுவாமி தம்பான் குறிப்பிடும் ஹர்மன் குண்டர்ட் போன்றோரை, அவர்களின் ஆளுமையை,  இந்த புதுவை  சாமியாருடன் ஒப்பிட்டு நோக்கினால்  அவர்கள் எத்தகையதொரு ஆகிருதி என பிரமிப்பே எஞ்சுகிறது. ஆத்மீகத்துக்கு ஊற்று முகமான குன்றாத 'செயல் ஆற்றல்' 'துணிவு''தன்னமிப்பிக்கை'என்பதன் பதாகை அல்லவா அவர்கள்.


அத்தகு ஆளுமைகளில் ஒருவர்தான் காரி டேவிஸ். சுவாமி தம்பான் சொற்களில் ஐரோப்பா உலக்குக்கு அளித்த பண்பாட்டுக் கொடை, அதில் டேவிஸ் போன்றவர்களின் இடம் அனைத்தும் சொல்லப்பட்டு விடுகிறது. கூடவே ஐரோப்பா இத்தகு மீறல்களையும் எப்படி ஒரு 'மரபார்ந்த சடங்காக'மாற்றிக் கொண்டிருக்கிறது எனும் எதிர்மறை சித்திரமும் வந்து விடுகிறது.

நித்யா குருகுலம்தான் எத்தனை கனவு விதைகளை நிலம் எங்கும் தூவிஇருக்கிறது. எத்தனை ஆளுமைகளை சரடாக கோர்த்திருக்கிறது? எத்தனை நல்ஊழ்கள், நாராயணகுரு  தனது மாணவரை தத்துவம் பயில மேலை நாடு அனுப்ப, அங்கு நடராஜகுருவை டேவிஸ் சந்தித்து அவரை தனது குருவாக ஏற்று, 'உலக மனிதன்' ஒரே உலகம் எனும் வரைவை முன் எடுக்க, தியாகம் மூலம் தனது கருத்தை அடிக்கோடிட டேவிஸ் நான்கு வருடம் தனிமை சிறையில் கழிக்க, நடராஜகுருவின் மாணவர் நித்ய சைதன்ய யதி, பதில் எதிர் நோக்காமல் காரிக்கு நான்கு வருடமும் மாதம் தவறாமல் தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். என்ன சொல்ல?உண்டு உறங்கி மண் மறையும் மாந்தக் கோடிளில், ஒளி கொண்டு மீளும் சிலர்

ஒரு முறை  அதி காலை  ஐந்துமணி  ஊட்டி குரு குலம். புல்வெளியில் நாராயண குரு சிலை அருகே நின்றிருந்தேன். சுவாமி தம்பான் என்னைக் கடந்து அதிகாலைப் பனி போல ஒரு குளிர்ந்த புன்னகையை அளித்துவிட்டு நித்யா சமாதி நோக்கி, அவருக்கு விளக்கு ஏற்ற நடந்து சென்றார். சமாதி மண்டப வாசலில் நின்றிருந்தது ஒரு காட்டெருமை. தம்பான் இயல்பாக அதை தாண்டி செல்ல, எருமை சற்றே சீத்தடித்தது. சுவாமி எனக்களித்த அதே புன்னகையோடு எருமையை வினவினார்.'ஒய் திஸ் கொலை வெறி'.

உத்வேகம் கொண்டு நானும் காட்டெருதைக்கடந்து மண்டபத்துக்குள் நுழைந்தேன்.தம்பான் அதே புன்னகையுடன் வினவினார் 'ஒய் திஸ் கொலை வெறி'?

தம்பானின் சித்திரம் கதைக்கு அழகு கூட்டுகிறது. குறிப்பாக அவர் 'முக்காலமும்'அறியும் இடம். தம்பான் ஒரு சாமியார் அவர் கார்ல் கசனின் நூல் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அதை வாசித்திருக்கிறீர்களா? என வினவுகிறார். 'இல்லை' என பதிலிறுக்கிறார் ஒரு எழுத்தாளர். எந்த நூலையும் திகைத்து வாய் பிளக்க வைக்கும் பதில். அவர் தந்த நூலின் வழியே காரி டேவிசை அறிமுகம் கொண்டு, குரு குலத்துக்கு வந்திருக்கும் காரி டேவிசை அணுகுகிறார் எழுத்தாளர்.

கதையின் இணை கோடாக, அதிகாலை துவங்கி அந்தி மாலை வரை, நிலம் வழங்கும் அத்தனை உயிர்ப்பும்,அழகும், சொற்களில் உயிர்கொண்டு, உள்ளங்காலில் புல்வெளியின் பனிஈரம் பதிந்தது போல ஒரு உணர்வை அளிக்கிறது.

டேவிஸ் தனது முதல் உரையாடலிலேயே,எல்லையற்ற நிலத்தில் வகுக்கப்பட்ட  அரசியல் எல்லை, எனும் கருத்தியலில் சிக்கி இருக்கும் மனதின் எல்லைகளை நகர்த்துகிறார். இப்போது அவர் முன் வைப்பது ஒரு கருத்தியலுக்கு மாற்றான ஒரு கருத்தியல் அல்ல. ஒரு வாழ்வியல். இந்த வாழ்வியல் கண்டடைதலை அவர் அடையும் பின்புலம் இரண்டாம் உலகப்போர். போர் முடிந்து அவர் அழித்த நிலங்களில், மனம் கலங்கித் திரிகிறார். எங்கெங்கும் செழுமை. மனிதனின் கீழ்மைகளை ஒரு பொருட்டே இல்லாமல் கடந்து வந்து செழிக்கிறது இயற்க்கை. அங்கிருக்கும் எளியவன் ஒருவன் 'ஏசுவின் பெயர் உன்னுடன் நிலவட்டும்'என வாழ்த்துகிறான். அக் கணம், அக்கணமே ஏசுவின் அக விரிவை அடைகிறார் காரிடேவிஸ். படைதவானால் கைவிடப்பட்ட மனிதர்களின் ஒரு துளி. அறியாமல் பிழை செய்வோர்களை மன்னிக்கக் கோரும் கடவுளின் ஒரு துளி.

எல்லைகள் உள்ளவரை போர். எல்லைகள் இல்லாவிட்டால் அது விளையாட்டு. தன்னை எல்லைகளுக்குள் நிறுத்தும் கடவுச் சீட்டை  ஒரு குறிஈடாக மாற்றி[காந்தி தென்னாப்ரிக்காவில் செய்ததுபோல] அதை எரித்து தனது முதல் அடியை வைக்கிறார். காரிடேவிஸ். அங்கு துவங்கிய அவரது மீறலும், பயணமும், ஆப்ரிக்க தனிமை சிறையில் முற்றிலும் புதிய பரிமாணம் கொள்கிறது.

பயணத்தில் இருப்பவனை நான்கு மூலைகளுக்குள்அடைப்பதைக் காட்டிலும், பேசிக்கொண்டே இருப்பவனை தனிமையில் தள்ளுவதைக் காட்டிலும் சிறந்த தண்டனை உண்டா என்ன? கலைகளின் தாயகம் பாரிசில் கண்டுபிடிக்கப்பட்ட தண்டனை முறை. இதுவரை காரி டேவிஸ் தாண்ட வேண்டிய தடைகளில் பெரிய தடையை இப்போது எதிர்கொள்கிறார். அது அவரது போத மனம்தான்.

இங்குதான் அவர் நடராஜகுரு வசம் கற்றது அவருக்கு துணை வருகிறது. தர்க்கம் ஞானம் ஆகும் தருணம். காரி அவரது போதத்தை சுவற்றில் வரைகிறார். தனது சித்தத்தின் விருத்தியை உன்னதப் படுத்துகிறார். பூமி ஆகிறார். தீராத ஆற்றலும் ,அளவற்ற பொறுமையும் கொண்ட பூமி. தம்மை அகழ்வாரை தாங்கும் பூமி.

தன்னை பூமியாக அறிந்த காரி டேவிஸ் அதன் எல்லை எது என்றே அஸ்தமன சூரியனைக் கொண்டு அறிகிறார். பூமி மட்டும்தானா நான். சூரியன் நான் இல்லையா? இப்போது அவரது போதத்தை வரைந்தால் அது வேறு படம். ஆம் அது பிரபஞ்ச சித்திரம்.

இனிய ஜெயம்  வேறு தேர்வே கிடையாது உங்களது புனைவு உலகம் மொத்தத்தில் இருந்து உங்களை பிரதிநித்துவம் செய்யும் ஒரே ஒரு கதையை என்னை தேர்வு செய்யச் சொன்னால், எந்த தடுமாற்றமும் இல்லாமல் நான் தேர்வு செய்யும் கதையாக இந்த ''உலகம் யாவையும்'' கதையே இருக்கும்.        

கடலூர் சீனு

Tuesday, January 27, 2015

துக்கத்தால் கடையப்படும் உயிர்-கடலூர் சீனு

உடல் பாண்டமாக, உயிர் தயிராக, துக்கம் மத்தாக,  துக்கத்தால் கடையப்படும் உயிர்.

இனிய ஜெயம்,

கடந்த இரு கடிதங்களைத் தொடர்ந்து ஏதோ ஆவல் உந்த  சட்டென்று அறம் தொகுதியை எடுத்து பிரித்தேன். தோழி ரீங்காஆனந்த்  நினைவு, நறுமணம் கொண்ட ஐஸ்க்ரீம் புகை போல  எழுந்து வந்தது. அவர்களின் பெயர் பொறித்த புத்தக பக்க அடையாள அட்டை  மத்துறு தயிர்  கதையில் நின்றிருந்தது.

உணர்வு நிலையில் உன்மத்தம் கூடிய, தமிழ் இலக்கியம் அதிகமும் தொடாத தளம் ஒன்றை சேர்ந்த அழகிய கதை.ஆன்மீக குருவுக்கும், கலையின் குருவுக்கும் மிக மெல்லிய வேறுபாடு மட்டுமே உண்டு என்று தோன்றுகிறது.

ஆத்மீகத்தில் குரு சீடனின் மீது கொள்வது  'பற்று'அல்ல என்று தோன்றுகிறது. அதில் நிலவும் குரு சீட உறவு, பாதையற்ற பாதை ஒன்றிலான பயணத்தில்   இணைந்து கொள்ளும் சக மயணிகள்.சீடன் 'அறியாத' ஒன்றை குரு 'அறிந்திருக்கிறார்'. இங்கு வழி தவறும் சீடனை, இந்த புதிர்ப் பாதை வகுத்த நியதிகளில் ஒன்றாகவே குரு காண்பார்.

கலையில் இருள் மிகுந்த இந்த வாழ்வில் ரசனையின் ஒளி பாய்ச்சி, அதில் துலங்குவதை குரு சீடனுக்கு காட்டுகிறார்.   குரு இருள் அடர்ந்த வனம் ஒன்றினில் கை விளக்கு தரும் ஒளியின் துணையுடன் நடந்து கொண்டிருக்கிறார். அந்த விளக்கு தரும் ஒளி வட்ட எல்லைக்குள் அவர் தனது சீடனை சேர்த்துக் கொள்கிறார்.
ஒளி வட்டத்தின் இலக்கு தாண்டி சீடன் வழி தவறினால். சீடனின் நிலை?  அவனது குருவின் நிலை?

பேராசிரியர் காணும் கனவில் ராஜன் நேரு வசம் பரிசு பெறுகிறார். நன்றி உரையில்ராஜன் தனது குருவான  பேராசிரியரை குறிப்பிட , அவரோ , அவரது குருவின் பெயரை ராஜன் குறிப்பிடாதது குறித்து கூவுகிறார்.

இங்கு தலைமுறை தலைமுறையாக  ரத்த உறவு, சாதி முறைகள், லௌவ்கீக உறவுக் கணக்குகள் அனைத்தையும் தாண்டி தொடர்வது என்ன?  மனிதர்கள் வித விதமானஉறவுத்  தொடர்புகளில் கட்டப் பட்டிருக்கிறார்கள்.ஆனால் இந்த உறவு அனைத்தைக் காட்டிலும் விளங்கிக் கொள்ள இயலா ஆழமும், வீரியமும் கொண்டது.

குமாரப்பிள்ளையின் மனைவி  சமையல்கட்டு வரை வரும் பேராசிரியரைக் கண்டு சீற்றம் கொள்ள. பிள்ளை 'அவனுக்கு இல்லாத இடம்னு ஒண்ணு என் கிட்ட இல்ல' என்கிறார் நிதானமாக.  கதையின் இந்த இடம்  என்னவோ செய்தது. குமாரப் பிள்ளை பேராசிரியர், பேராசிரியர் ராஜன், இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொள்வது வேறு எல்லை. ஆனால்   அந்த சொல்லுக்குப் பிறகு அந்த அம்மா பேராசிரியரை தனது பிள்ளையாகவே வரித்துக் கொள்வது. என்ன சொல்ல அந்த கணம் அந்த அம்மாள் கதையில் இலங்கும் அனைத்து காதாமாந்தர்களையும் விஞ்சி விடுகிறாள்.

பேராசிரியர் குமாரப் பிள்ளையை நினைத்துக் கொள்ளாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பிள்ளையின் நினைவு வருகையில் எல்லாம் ராஜனின் நினைவும் எழாமல் இருக்குமா என்ன?

கதைக்குள் ராஜன் குறித்த முதல் சித்திரமே , ராஜனும் பேராசிரியரும் நீண்ட நாள் கழித்து தெருவில் சந்தித்துக் கொள்ளும் சித்திரம்தான். முழு குடிகாரனாக, உடல் அழிந்து, தெரு நாய் போல குந்தி அமர்ந்து  தலையில் கை வைத்திருக்கும் ராஜனின் கோலம். பேராசிரியர் தனது குருவை முதன் முதலில் சந்திக்கும் தருணம் பற்றி சொல்கையில் ''ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு. எந்த ராஜாவாலும் அடஞ்சுக்கிட முடியாத ஒண்ணு''. தனது குருவின் வரிசையில் வைத்துப் பார்க்கும் ராஜனின் இந்த கோலத்தை பேராசிரியர் எப்படி எடுத்துக் கொள்வார்.

ராஜன் குறித்த சித்தரிப்பு ராஜனின் உள் உலகை துல்லியமாக முன் வைக்கிறது. ராஜன் தீமையோ, கள்ளமோ இல்லாத மனிதர் , அதனால் இயல்பாகவே எளிமையானவர். அதைக் கொண்டு பார்த்த முதல் பார்வஎலேயே  கட்டிப் பிடித்துக் கொள்ளத் தோன்றும். சிவாஜி படம் கண்டு கூட கதறி அழும் இளகியவர்.

அனைத்துக்கும் மேலாக ராஜனது 'ஆற்றல்' அவர் என்ன செய்தது கொண்டிருக்கிறாரோ  அதில் சிதறலே இல்லாமல் குவியக் கூடியது. உடல் வளர்த்தால் அதில், கலையில் தோய்ந்தால் அதில், காதலித்தால் அதில், குடியில் விழுந்தால் அதில். கிட்டத்தட்ட எகாக்கிரகம்.

ராஜனின் கண்களில் இலங்கும் கனிவில் விழுகிறாள்  ஒரு நாயர் இளம் பெண். கன்னிமைக்கே உரிய கள்ளமற்ற கணம் ஒன்றில் அவள் ராஜனால் வசீகரிக்கப் படுகிறாள். சாதியோ வேறு எழவோ அவர்கள் குறுக்கே வர, அவள் ராஜனை இனி அவளுடன் பேசவே கூடாது என்று விடுகிறாள். பண்பட்ட மனிதன் எய்தும் அத்தனை துயறையும் ராஜன் அடைகிறார். குடியில் விழுந்து அனைத்திலிருந்தும் வழி தவறுகிறார்.

இங்கே எந்தப் பிரிவுக்காக வருத்தம் கொள்ள? ராஜன் அவரது காதலி பிரிவுக்கா? அல்லது ராஜனின் குரு ராஜனைப் பிரிந்த நிலைக்கா?

இங்கே இரு தகப்ப்பங்களின் உக்கிரமான வாழ்க்கைச் சம்பவம் நினைவில் எழுகிறது. ஒருவர் பேராசிரியரின் தந்தை. ஒரு வேளை உச்சைக்கஞ்சி  மட்டும் குடித்து [அதில் பாதியை மிச்சம் வைத்து பெராசிரியர்க்கு தருகிறார்] பேராசிரியரை கல்வியில் உயர்த்துகிறார். அந்த அப்பனைப் போல் தானே ராஜனின் தந்தையும் ராஜனை வளர்த்திருப்பார்? ராஜனின் அப்பா  கோவிலில் தனது மகனை விட்டு விட சொல்லி  தனது  உதிரத்தை காணிக்கை தரும் சித்திரம் , ஆம் அவரும் மத்துறு தயிர்தான்.

ராஜனின் தந்தை கோவிலில் உதிரம் வடிக்கிறார். ராஜனின் குருவோ தனது ஞானத்தின் கம்பீரம் அனைத்தையும் விட்டு பெண் வீட்டார் வசம் 'என் பிள்ளைய கொன்னுடாத' என்று கெஞ்சுகிறார்.

ராஜன் குறித்த  உரையாடல் இடையே  குமார் தனது சீடன் சஜனை பற்றி பேசுகிறார் ''நல்ல பையன். ஆனா எந்த புக்கையும் பாதிதான் படிப்பான். சொல்லிக்கிட்டே இருக்கணும்''. மற்றொரு பாதி வழி பயணி.

பேராசிரியர் சொலிறார்''எந்த உறவுக்கும் கைம்மாறு செய்து விடலாம். குருவுக்கு என்ன செய்ய முடியும்'' கைம்மாறு செய்ய இயலா உறவு. நீ எது செய்தாலும் சரிதான் என ஒப்புக் கொடுக்க ஒரு உறவு. உறவுகில் இணையற்றது இதுதான். இங்கே பிரிவினை நிகழ்ந்தால் அந்த துயரின் ஆழம்?

கதைக்குள் வருவது போல  மனிதனுக்கு எண்ணி சொல்ல இயலா, தாள இயலா துயர்கள். அனைத்தும் ஒன்றாகி மனிதனில் கவிவது உற்றவர் பிரிவில்.

ராஜன் பேராசிரியர் காலடியை தொழுகையில்  இதோ இந்த இரவில் தனிமையில்,  ராஜனுக்காக அவரது அப்பாவுக்காக பேராசிரியருக்காக , உறவாலும் பிரிவாலும் மனிதர்களை கட்டி ஆளும் அந்த 'அறிய முடியாமைக்காக' ஏங்கி அழுதேன்.

இனி ராஜனை பார்க்கவே போவதில்லை என்றானபிறகு பேராசிரியரின் அகத்தில் நிகழும் மாற்றம் முக்கியமானது. அது வரை ராஜன் அவரது மகன். கரத்த்தரின் கணக்கை அறியாமல் எனது கணக்கை போட்டேனே என்றுதான் கலங்குகிறார். கார் ஏறுகையில் பேராசிரியர் சொல்கிறார்.
‘நான் சங்கு பொட்டி சொன்ன ஜெபத்தையெல்லாம் கர்த்தாவு கேக்கல்ல. ஆனாலும் எனக்க சீவனுள்ள வரை நான் ஜெபிப்பேன் குமாரு…எனக்க பயலுக்கு ஒரு கொறையும் வரப்பிடாது…அவன் கர்த்தாவுக்க பிள்ளையாக்கும். அவனுக்க வலியெல்லாம் கர்த்தாவு எடுக்கணும்..''

ஆம் இனி ராஜன் கர்த்தாவின் பிள்ளை.துயரத்தை வழங்கி மனிதன் ஆத்மாவை சுத்தம் செய்யும் கர்த்தா.  ஒப்படைத்து விட்டு கிளம்புகிறார் பேராசிரியர். இலையை, தளிரை,பூவை, பிஞ்சை மரத்தை, வனத்தை  என அனைத்தையும் எரித்தபின்னும் தணியாமல் எஞ்சி நிற்கும் பிரிவுத்துயரை ஏந்தியபடி

கடலூர் சீனு

<a href="http://aramstories.blogspot.in/">அறம் அனைத்து கடிதங்களும்</a>

Thursday, January 22, 2015

ஒற்றைக்கால் தவம் கடலூர் சீனு

இனிய ஜெயம்,

இப்போது யோசித்துப் பார்த்தால், மயில் கழுத்து சிறுகதையும், தாயார் பாதம்  சிறுகதையும்  எதோ ஒரு புள்ளியில் பிரிக்க இயலாதபடி பின்னிப் பிணைந்திருப்பதாகப் படுகிறது.  தாயார் பாதம்  சிறுகதையில்  பிறிதொரு சமயம் ராமனும்,பாலுவும் கழுகுமலை செல்லப்போவதற்கான லீட் வந்துவிடுகிறது. அனைத்துக்கும் மேல்   மயில் கழுத்து   கதையில்  ராமன் எழுத்து மற்றும் சங்கீதத்தை ஒப்பிட்டு சங்கீதத்துக்கு கொடுக்கும் இடம்.இலக்கியத்தில் உள்ளது போல தீமையும் குப்பையும் இல்லாத  அதி தூயது சங்கீதம் என்றே சொல்கிறார்.   அவரது இலக்கும் கூட தீமையே இல்லாத ஒரு புனைவு எழுதுவதாத்தான் இருக்கிறது.

இந்தப் புள்ளியில் நின்று  தயார் பாதம்  சேஷய்யரை நோக்கினால். அவரது சங்கீத சாகரம்  என்ற ஆளுமைக்குள்  புதைந்து கிடக்கும் 'ஆலகாலம்' துணுக்குற வைக்கிறது. ராமன் வள்ளிக்கு நீல வண்ண பட்டு எடுத்து சாற்ற விழைகிறார். அது ஒரு சமர்ப்பணம், ஈடேற்றம் அல்லவா? சேஷையர் சரஸ்வதிக்கு குடம் குடமாக தேனாபிஷேகம் செய்கிறார். ஆனால் அது அவருக்குள் உறைந்த கசப்பை  எதுவுமே செய்ய வில்லை.

ராமன் ஒற்றைக் கால் தவம்  என்ற பதத்தை கேள்விப்பட்டதுமே உத்வேகம் கொண்டு விடுகிறார். பாலுவின் 'சைன்டிபிக்' விளக்கம் எதுவும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்தப் பதம்  ராமனின் பாட்டி குறித்து, சேஷையாரின் லவ்கீகங்களை கவனித்துக் கொள்ளும் சீடர் சொல்லும் ''விடு எல்லோரும் இரண்டு கால்ல நிக்கறா .சிலர் ஒரு காலை தூக்கிடரா அவ்வளவுதான் ஒண்ணும் பண்ணறதுக்கு இல்ல''. எனும் சொல் வரை கொண்டு வந்து விடுகிறது.

ராமன் கேட்பது சரியான கேள்விதான். கல்யாணம்தான் நடந்துகிட்டே இருக்கே. பிறகு ஏன் ஒற்றைக் கால் தவம்?  சேஷையர் அப்பா முன்  அவரது வருங்கால மருமகள் மூட்டை முடுசிச்சுடன் வந்து நிற்கையில் இதற்க்கான விடை கிடைக்கிறது.  எல்லா பெண்களும் தவம் இருக்கிறார்களா என்ன? ராமனின் பாட்டி ஒரு கலைஞ்ஜி பாடகி. அவள் 'என்னவாக இருக்கிறாளோ' அதை மலரவைக்கும் எதிர்காலம் அவளுக்கு தேவை. அந்த ஆவல் கொண்ட பெண் யாரும் அகத்தில் ஒற்றைக் கால் தவத்துடன்தான் இருப்பார்.

அவளது தவத்துக்கு வரமாக கிடைத்தவர்தான் அவளது மாமனார். அவளது நிலையில் நின்று பார்த்தால் அவளது மாமனாரும் சேஷய்யரும் அவளுக்கு எத்தகையதொரு நம்பிக்கை?

ஆனால் புக்ககத்தில் அவளுக்கு நிகழ்ந்தது , ஓவியனின் விழிகளை சிற்பியின் விரல்களை பறித்ததுபோல எத்தகையதொரு அநீதி? அவளுக்கு எங்கே பிழை நிகழ்ந்தது? சக கலைஞ்சன் சேஷையரால் நிகழ்ந்ததே அது.  சேஷய்யர் அவரது குருவால் வளர்க்கப்பட்டவர். ஆனால் அவரது குருவோ தெருவில் இருந்து சாட்சாத் சரஸ்வதியே  மருமகளாக அழைத்து வருகிறார்.  எந்தக் கலைஞ்சனுக்கும் தன்னை மிஞ்சிய கலைஞ்சனை உடனே அடையாளம் தெரிந்து விடும். இங்கே சேஷய்யருக்கு அது அவரது மனைவி உருவில். அங்கு அவர் மனதில் விழுந்த விஷ வித்து , அவர் மனைவி தலையில் மலக்கரைசலை கவிழ்ப்பதில் விருட்சமென விஸ்வரூபம் கொள்கிறது. ஆம் அவரால் சரஸ்வதிக்கு குடம் குடமாக தேனாபிஷேகம் செய்ய முடியும். சட்சாத் சரஸ்வதியே எதிரில் நின்றால் அவளது தலையில் மலக் கரைசலைதான் அவரால் ஊற்ற முடியும்.

இந்தத் தாயாரின் பூமியில் பதிந்த பாதம்  அவளுக்கு சேஷய்யர் தரும் மனநோய் வாழ்வு. பூமி தொடாத பாதம்  அவளது கலைஞ்ஜி  எனும் கனவு.

கமல் மேடையில்  ''இந்தாளு எழுதுன கொற்றவைய படிச்சதும். ஒண்ணு எழுதி இந்த ஆள மிஞ்சனும். இல்லன்னா அடிச்சு கொன்னுடனும்னு தோனுச்சு''என்றார். ஷேஷய்யரும் கலைஞ்சர்தான் .அவர் இரண்டாவதை செய்தார்.

இனிய ஜெயம் ஒரு கலை ஆளுமை  ஒன்றின் சரிவை, வீழ்ச்சியை, சுத்தத்தின் பின் உறையும் சாக்கடையை  இத்தனை உக்கிரமாக முன்வைத்த கதை தமிழில் பிறிதொன்றில்லை.

கடலூர் சீனு

Sunday, January 18, 2015

மயில்கழுத்து பற்றி கிரிதரன் ராஜகோபாலன்

மயில்கழுத்து கதையை முன்வைத்து

நண்பர் நட்பாஸும் நானும் சில சிறுகதைகள் பற்றி மடல் மூலம் பகிர்ந்துகொண்டோம். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு திரும்பியபோது அவர் பல அப்சர்வேஷன்களைப் பகிர்ந்து கொண்டார். நண்பர் நட்பாஸின் ஆர்வம் இலக்கியத்தைத் தாண்டி உளவியல், அறிவியல், உலக அரசியல் என எல்லையில்லாமல் நீளும். அவரது சம்மதத்துடன் சிறுகதைகள் பற்றியும் ஜெயமோகன் எழுதிய ’மயில்கழுத்து’ பற்றியும் ஓரிரு எண்ணங்கள்.

*
மயில்கழுத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்கள், பின் - முன் உட்கதைகள் வரிசையாக வருவதில்லை. ஒரு ப்ளாட்டிங் பேப்பரில் பல இடங்களில் தொடப்படும் மை மெல்ல ஊறி எல்லா இடங்களையும் இணைப்பது போல், கதை/உட்கதை ஆங்காங்கே விவரிக்கப்பட்டு நம்முன் ஒரு நிகழ்வாக விரிகிறது. ஒரே காலத்தில் நடக்கும் கதையானாலும், இக்கதைக்குள்ளும் ஃபிளாஷ் பேக் எல்லாம் இருப்பதால் முன் - பின் நகரும் படம் போல் கதை பல இடைவெளிகளை நிரப்பியபடி முடிவை நோக்கிப் போகிறது. ஒரேடியாக வரிசைக்கிரமமாகக் கதையைச் சொல்லாமல் இப்படிச் சொன்னவிதம் கதை ஓட்டத்தை தீர்மானிக்கிறது. இதுதான் இக்கதையில் எனக்குப் பிடித்த அம்சம்.

சிறுகதை முதல் வரிக்கு முன் ஆரம்பித்துவிடுகிறது எனச் சொல்வார்கள். அந்த மெளனத்துக்கும் முதல் பத்தியின் லயமும் தெளிவாக நம்பும்படி இருந்துவிட்டால் பாதி வெற்றியாம். இசை போல், மெளனத்துக்கும் முதல் ஸ்வரத்துக்கும் இடையே இருக்கும் சம்பந்தம். சிறுகதை இசைக்கப்படாத பியானோ போல். ஒரு அறைக்குள் இருக்கும்வரை மெளனம் மட்டும் இருக்கும். ஒரே ஒரு விசையை அழுத்திவிட்டால் போதும். அறையின் ஒலிவெளி மாறிடும். அதுபோல் நிகழ்வுகளின் வரிசையை மாற்றினாலும் கதை பொருள் தரலாம் - ஆனால் சிறுகதையின் லயம் மாறிவிடும். கதையின் சில வரிகளைப் படிக்கும்போது கதையின் போக்கே மாறிவிட்டது போல் தோன்றும். சிறு சலனம் போல் இருந்தாலும், நாம் கதையைப் புரிந்துகொண்ட விதத்தை மாற்றி போட்டுவிடும். எனக்கு அப்படிப்பட்ட வரிகள் மேல் மிகுந்த ஆசை உண்டு. அவ்வரியை முன்வைத்து மீண்டும் கதையைப் படித்தால் புது இடங்களுக்கு அது இட்டுச் செல்லும். இது ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா கதைகளில் வரும் கடைசி திருப்பம் இல்லை. கதையில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வரிகள் தனித்து நின்றால் அர்த்தம் அவ்வளவாக கிடைக்காது. ஆனால் கதையைப் படித்த பின் கதையின் திருப்பம் மற்றும் மையம் அவ்வரியில் குடிகொண்டிருப்பது போல் தோன்றும்.

ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை அவள் அம்மா  ‘என்னடி வாயில?’ எனக் கேட்பாள், ‘சூயிங்கம்’ என அப்பெண் பதிலளிப்பாள். கற்பழித்தவன் வாயில் இருக்கும் சூயிங்கம் அது. அதை கடைசி வரை அப்பெண் மென்றுகொண்டிருப்பாள். கதையில் சாதாரணமாக வரும் உரையாடலாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக கதையின் ஆதாரத்தையே நம்மை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட வரிகள் இரண்டு முறை படித்தால் மட்டுமே புலப்படும் என நினைக்கிறேன். முதல் முறை கதையை ஒட்டுமொத்தமாக அணுகிய பின், அவற்றின் சிறு பகுதிகளுக்குள் ஆழமாகச் சென்று கதையோடு அவை எப்படி பொருந்தி வருகிறது எனப் பார்ப்பது நல்ல அனுபவம். ஏனென்றால் சிறுகதையின் ஒவ்வொரு வரியிலும் கதை பற்றி ஏதேனும் விஷயம் இருக்கும் எனத் தோன்றுகிறது. அப்படி இருக்கும் கதைகள் வாசகனாக நம்மை ஈர்த்து மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டலாம். வண்ணநிலவனின் மிருகம். ஒரு முறை படித்தால் கதை என்ன சொல்ல வருகிறது என குழப்பம் வரலாம். யார் மிருகம் என விசாரணையில் இறங்கும்போது மீண்டும் கதையைப் படிக்கலாம்.

*


மயில்கழுத்தில் பிரதானமாக நான்கு பாத்திரங்கள். ராமன், பாலு, சுப்பு ஐயர், சந்திரா. உண்மை கதாபாத்திரங்களின் கதை என ஜெயமோகன் சொல்லியிருந்தாலும், உண்மை நபர்களின் சாயல் தெரியாமலும் கதையின் மையம் புரியும் என நினைக்கிறேன். சிறுகதை யாருடைய பார்வை கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மூன்றாம் நபரின் பார்வை. அதிகப்பிரசங்கியாய் எல்லார் மனதிலும் புகுந்து வெளிப்படும் அநானிமஸ். ஆனால் பல முறை படித்த பின், கதையின் மையம் பாலு கதாபாத்திரம் வழியாகவே விரிகிறதாகத் தோன்றுகிறது. அதற்குப் பல காரணங்கள் - எல்லார் மனதையும் ஊடுருவிப் பார்த்து எடை போடுபவராக பாலுவின் பாத்திரப்படைப்பு வெளிப்படுகிறது. சுந்தர ராமசாமியின் குணாதிசயம் என்ற பின்புல ஞானம் இல்லாத வாசகருக்கும் பாலு பாத்திரம் தெளிவாக, அழுத்தமாகப் புரியும் என நினைக்கிறேன். மேலும், பாலுவின் எண்ணங்கள் மூலம் கதாபாத்திரங்கள் உட்சிக்கல் பல காட்சிகளாக நம்முன் விரிகிறது. குறிப்பாக சந்திரா தன்னிடம் அறிமுகமானது பற்றி ஒரே ஒரு வரியில் ராமன் குறிப்பிடும்போது (’கலாஷேத்ராவிலே மாயான்னு ஒரு பெல்ஜியம்பொண்ணு இருந்தா. அவ எங்க வீட்டுக்கு மேலேதான் குடியிருந்தா. அப்ப அவகூட போறச்ச இவளை அறிமுகம்’) பாலுவின் பார்வை பல கதைகளை சொல்லாமல் வெளிக்காட்டுகிறது.

இக்கதையில் பாத்திர அறிமுகங்கள் பற்றி சில வார்த்தைகள். ‘நீலமா?நீலம்னா சொல்றேள்?’ என ஆரம்பிக்கும்போது எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என நமக்குப் புரிவதில்லை. சில பத்திகளுக்குப் பின்னே அது வெளிப்படுகிறது - அதுவரை இக்கேள்விக்கான பதில், அதற்கான கேள்வி என உரையாடல் மூலம் இரு கதாபாத்திரங்களும் தெளிவாக நிலைபெற்றுவிடுகிறார்கள். அதே போல், முதல் பத்தியிலிருந்தே பாலு மற்றவரை எப்போதும் எடை போட்டுக்கொண்டே இருப்பவராக வெளிப்படுகிறார். யாரைப் பார்க்கிறோமோ அவரைப் பற்றிய அபிப்பிராயத்தை சீல் வைத்து மூடி ஜட்ஜ்மெண்ட் கொடுப்பவராக - தீர்க்கமான முடிவெடுப்பவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார் (’காபி ஸ்டிராங்கா இல்லேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்குவேள்… மத்தபடி மனுஷனோட இருட்டைப்பத்தியும் தீமையப்பத்தியும் உங்களுக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது…’ , ‘கும்பகோணத்திலயும் பாபனாசத்திலேயும் உங்க கண்ணு முன்னாடி நடந்தாத்தான் உங்களுக்கு பிரச்சினை. இல்லாட்டி ஒண்ணுமில்லை இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டி இல்லே..’ என்று தஞ்சாவூர்த்தனமாக ராமன் இழுக்க ‘அதான்’ என்று பாலசுப்ரமணியன் அழுத்தினார். ராமன் மீண்டும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கைக்குட்டையை கைக்குள் வைத்து பிசைந்துகொண்டார்.’)

தொண்டைக்குள் சிக்கிய முள் போல் ராமன் எல்லாவற்றிலும் முனுக்கென தனக்குள் முடங்கும் மனதைக் கொண்டவர். தன்னைப் பற்றியோ, அடுத்தவர்கள் பற்றியோ தெளிவான முடிவுக்கு வராதவர். அல்லது அவற்றை முன் வைக்கத் தெரியாதவர். சந்தேகக் கண் கிடையாது. ஆனால் பாலு தன் குணாதிசயத்தை மூர்க்கமாக தீர்ப்பு சொல்லும்விதமாக முன்வைக்கும்போதெல்லாம் தனக்குள் சிந்தனை வயப்படுகிறார் (’நான் எழுதறேன்…தீமையே இல்லாம நல்லதை வச்சு நான் கிளாசிக்கு எழுதறேன்’ என்றார். பெரிய எடையை தூக்கி வைத்தவர் போல திணறி உள்ளங்கைக்குள் இருந்த கைக்குட்டையை விரித்து முகத்தை துடைத்துக்கொண்டார். முகத்தை அதில் ஒளித்துக்கொள்ள ஆசைப்படுபவர் போலிருந்தார்.)

கதையின் ஆரம்பத்தில் இருவரின் குணங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பின் முடிவு வரை மாற்றமில்லை. உணர்வுகளை வெளிப்படையாக முன்வைக்கும் ராமனின் குணம் மாறுவதில்லை. ஆனால், உணர்வுகளுக்கு அறிவார்ந்த மேல்பூச்சு கலந்து வாதாடும் பாலுவுக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. சந்திரா வந்த பின் இது மேலும் தீவிரம் கொள்கிறது.

சந்திரா - திரைப்பட நாயகி போல் சாமிநாதன் பாடலுடன் அறிமுகமாகிறாள். ஒருவிதத்தில் இப்பாடல் கதையின் அடிநாதமாக விளங்குகிறது. ’கழுகுமலை முருகன்’.

– உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே – உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே

...மயக்
கம்செய்யுதே காமப் பித்தமே

இவ்வரிகள் முடியும்போது சந்திரா அறைக்குள் நுழைகிறாள்.  ‘தேடக் கிடையாத சொன்னமே’ எனும் வரியே காட்சியாக நடந்தது என அனானிமஸ் விவரிக்கிறார். சந்திரா வந்தவுடன் பாலு தன்னியல்பாக அவளை தன் மனத் தராசில் நிறுத்திப் பார்க்கிறார். அவள் கம்பீர செளந்தர்யத்தில் கலக்கம் அடைகிறார். இதை உணரும் சுப்பு ஐயர் ‘நானும் கவனிச்சிருக்கேன், சந்திராவ முதல்ல பாத்தப்ப பேஸ்தடிக்காத ஒருத்தனைக்கூடப் பாத்ததில்லை’ எனச் சொல்வதன மூலம் சந்திராவின் அழகின் வரலாறு நிலை நாட்டப்படுகிறது.

இக்காட்சியின் போது முக்கியமாக ஒன்று நடக்கிறது. அது வரை பாரபட்சமில்லாமல் எல்லாரையும் எடை போட்டு ‘இவன் இப்படித்தான்’ என ஸ்டாம்பு குத்தும் பாலு முதல் முறையாக தனக்குள் ஒரு உரையாடலை நடத்துகிறார். (’ஒருகணம் அவளுடைய முகமும் மறுகணம் தன்னுடைய தோற்றமும் அவர் மனதில் மாறி மாறி எழுந்தன. இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாமோ. தலையைச் சீவிக்கொண்டிருக்கலாமோ?’) இந்த இடத்தில் ஆசிரியர் பாலுவாக பேசி வெளிப்பட்டு விடுகிறார். இதே போன்ற  இடம் ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையில் நடக்கிறது (ஹ்ம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில்-) என கற்பழிக்கப்படுவதற்கு முன் அப்பெண் தனக்குள் பேசுவாள்.

மேலுள்ள ஒப்பீடு கதைக்கு முக்கியம். கதையின் ஆரம்பத்தில் நீலம்னா சொல்றேள் எனக் கேட்கிறார் பாலு. அதற்கு விளக்கம் பல பத்திகளுக்குப் பின் வருகிறது (’‘பொதுவா நீலம், ஊதால்லாம் மன இறுக்கம் உள்ளவங்களுக்கு புடிச்ச நெறம். மனுஷனோட தீமைய கவனிக்கிறவங்களுக்குண்டான நெறம்.’). இங்கே கதையில் நீலம் என்பது தீமைய கவனிக்கும் மக்களுக்குப் பிடித்த நிறம்.  மனிதன் தீமைக்காக மட்டுமே வாழ்பவன் என்பது பாலுவின் வாதம் (மனுஷனோட தீமைக்கு அளவே கெடையாது. அது மனுஷனை விட பலமடங்கு பெரிசு. வாழ்க்கைக்காக மனுஷன் தீமையப் பண்றதில்லை, தீமைக்காகத்தான் மனுஷன் வாழறான். ).  ஆனால் இத்தீமை வெளியே மற்றவனிடமிருந்து வரத்தேவையில்லை என்பது ராமனின் வாதம். நமக்குள்ளேயே தீமை சில குணாதிசயங்களாக மறைந்திருக்குன்னு ராமன் சொல்கிறார்( இருக்காங்க. ஆனா அவங்களும் வாழ்க்கையிலே மாட்டிண்டிருக்கிற சாதாரண மனுஷங்கதான்… பொறாமைப்படுறாங்க, பொருமறாங்க. முடிஞ்சவரைக்கும் மத்தவா கையிலே இருக்கிறத பிடுங்கிண்டுட முயற்சி பண்றாங்க… அதெல்லாம் பண்ணல்லேன்னா அப்றம் எப்டி மனுஷங்க?’).

தீமை வெளியே இருந்து வருவது என்பது பாலுவின் வாதம். மனிதனின் குணாதிசயத்தின் திருகலே தீமை என்பது ராமனின் வாதம். ஆனா, இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாம், தரித்திரம் பிடித்த தாவணியை போட்டிருக்ககூடாது என நினைக்கும்போதே தீமை மனதில் எழுந்துவிட்டதாக அர்த்தம் வருகிறது. தன் எல்லா உணர்வுகளுக்கும் தன்னால் விளக்கம் கொடுக்க முடியுமென இறுமாப்போடு இருக்கும் பாலுவுக்கு தனக்குள் நடக்கும் உரையாடல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட உரையாடலே திருகு மூளையின் தீமை என ராமன் சொல்லாமல் சொல்லிவிட்டார். நமக்குள் இருக்கும் so called தீமை வெளிப்பட வெளியாள் தேவையில்லை நம் மனம் மட்டும் போதும் என்பதை கதை சொல்ல வருவதாகத் தோன்றுகிறது.

சந்திரா வந்தவுடன் அந்த அறையின் பேலன்ஸ் ஆட்டம் போடுகிறது. சொல்ல முடியாத மெளனம் அங்கிருப்போரைச் சூழ்ந்து கொள்ள சுப்பு ஐயர் மட்டும் தன் வழக்கம் போல் பேசியபடி இருக்கிறார். அதுவரை ஐயருடன் சந்தோஷமாகப் பேசிய ராமன் சந்திரா வருகைக்குப் பின் தலை குனிந்து ஏதோ சிந்தனையில் இருக்கிறார். பாலு தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமலும், அறைக்குள் இருக்கும் மற்றவர்களுடன் சந்திராவுக்கு இருந்த உறவை எடை போட்டபடி இருக்கிறார்.

-

உரையாடல் சந்திரா- ஐயரின் தனிப்பட்ட அம்புகளாக அமைய அதுவரை நெளிந்து வந்த ராமன் கீழுள்ள ஒரு அறைக்கு தப்புகிறார். பாலுவும் அவரைப் பின் தொடர்கிறார். இருக்கமான அறையிலிருந்து விடுபட்டதும் பாலுவுக்கு தன்னியல்பு திரும்புகிறது. ராமன் பேசாமல் பெருமூச்சோடு நிற்பது தெரிந்தும், அவராக பேசட்டும் பேசாமல் அவரால் இருபது நிமிடம் கூட இருக்கமுடியாதே என நினைக்கிறார்.  உரையாடல் தொடரும்போது திரும்பவும் பாலு தன்னியல்பாக ராமனின் இசை பிரயோகத்தைப் பற்றி அவருக்கே விளக்குகிறார் (சிலபேர் இயற்கைய வர்ணிப்பா. சிலபேரு சமையலை வர்ணிப்பா. நீங்க இசைய சொல்றேள்…’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டீங்கறீங்களோ?’ என்றார் ராமன்). வழக்கம்போல் ராமன் அதைப் புரிந்துகொள்ள முயல்பவர் போல் கேட்டுக்கொள்கிறார். சந்திராவின் இருப்பிலிருந்து விலகியதும் இருவரும் சகஜ நிலைக்குத் திரும்புவது போல் உள்ளது.

’நீலப்பட்டுப்பொடவைய எடுத்து வச்சு ராத்திரி லைட்டு போட்டு பாத்துண்டே இருந்தேன். என்னன்னே தெரியலை, திடீர்னு ரொம்ப பயந்துட்டேன்’ - திரும்பவும் நீலம் எட்டிப்பார்க்கிறது. ஜெயமோகன் பல கதைகளில் அமானுஷத்தன்மையை விளக்க நீலத்தை உபயோகித்துள்ளார். குறிப்பாக கொற்றவை நாவலே நீல நிறத்திலிருந்து பிறந்ததாக கூறியுள்ளார் - கொற்றவையின் முதல் வரி ‘அறியமுடியாதவற்றின் நிறம் நீலம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்’. ஒரு எழுத்தாளனின் கதையில் இப்படி பல self references இருப்பது ஒரு வகையில் கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது.

அடுத்து வரும் பத்திகளில் ராமன் - சந்திரா உறவு விரிவடைகிறது. பாலு ராமனின் மெளனத்தை அவதானிக்கிறார் - ஆனால் பாலு திடீரென சந்திரா வேணாம், கச்ச்சேரி வேணாம்னு சொல்கிறார். ஏன்? இங்க கதையோட முடிச்சு கிடைக்கிறது - எதனால் சந்திரா மேல் எரிச்சல்? இல்லை அது அவர்மேல இருந்ததில்லை முழுமையான அழகை சந்திக்க முடியாமை, தன்னுள் ஏற்படுத்தும் மாற்றம், தாபம்னு சொல்கிறார் ராமன்.( ‘ராமன் எழுந்து சட்டையை கழற்றியபடி கவனமில்லாமல் கேட்பதுபோல ‘அவளும் உண்டோ?’ என்றார். ’) சந்திராவும் கச்சேரிக்கு வருவது தெரிந்ததும் தன்னால் கச்சேரியில் லயிக்க முடியாது என்ற எரிச்சல் மேலோங்குகிறது. அதனாலே கச்சேரி வேண்டாம் எனக் கிளம்பப் பார்க்கிறார்.

மணி ஐயருக்கு புரிந்த அழகியல் தனக்கு புரியலைன்னு ராமனுக்கு வருத்தம் என எனக்கு தோன்றியது. அதை பாலு புரிந்து கொண்டாரோ என்ற பதற்றம் - இத்தனைக்கும் ராமன் பெண்மை சாயல் கொண்டவர், பெண் அழகு பற்றி கதை எழுதுபவர் - செக்ஸ் பற்றி நுட்பமா எழுதுபவர் - அவராலேயே அந்த அழகை புரிந்துகொள்ள முடியலை - ஆராதிக்க வேண்டாம் - சொந்தம் கொள்ள ஆசை இல்லை - `புரியலை` அது தரும் வேதனை ராமனுக்கு உண்டாவதாக நான் புரிந்துகொண்டேன். சாமிநாதன் சொல்வதும் அப்படியே தோன்றுகிறது (இல்லண்ணா …தெரிஞ்சா இவர வரச்சொல்லியிருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டப்படுறார். ஆனால் நல்லா நாலஞ்சு அடிகிடைச்சு முறிஞ்சுபோனாக்கூட நல்லதுதான்). தாபம், காதல் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ராமனுக்கு அது கானல் நீர் எனத் தெரிகிறது - ஐயரின் இசை ஞானம் எல்லாருக்கும் முழுவதாய்ப் புரியாதது போல்.


மோகமுள் கதையில் பாபு, ராஜம் இருவரும் நண்பர்கள். ராஜம் - தெளிவான கருத்துகளுடன் அந்தந்த கணத்தில் வாழ்பவன். பாபு தணியாத இசை ஆர்வம் கொண்டவன். ஆனால் தாபம் அவன் மனதுள் கொந்தளிப்பை உருவாக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்து மட்டுமல்லாமல் இசை  ஒருவனின் உள் இயல்புகளை காட்டும் கண்ணாடி என நம்புபவன். இசைக்கு, தன் அப்பாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக நினைக்கிறான். காதல் தாபத்தில் தவிப்பவன். இசை மூலம் காலத்தை பின்னுக்கு ஓட்டுபவன். அவனுக்கு இசை ஒரு மீடியம். உணர்வுகள் ஊற்றெடுக்கும் மீடியம்.

மயில்கழுத்து(2) கதையில் இந்த இருவரின் மனப்போக்கிலேயே பாலு, ராமன் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம். ராமன் எதற்கும் சட்டென உணர்ச்சி வசப்படுபவர். தன் ரத்தத்தில் இசை பெருக்கெடுத்து ஓடுவதாக நம்புபவர். ஜெயமோகனின் `தாயார் பாதம்` கதையிலும் இதே ராமன்  தன் இசை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுவார். இசையில் இயங்க முடியாமல் எழுத்தில் கொஞ்சம் கொட்டுபவன் என எண்ணுகிறார். தன் எண்ணங்களைத் தெளிவான கருத்துகளாக முன்வைக்க முடியும் என திடமாக நம்புபவர் பாலு.

புள்ளிகளை இஷ்டம் போல் மனம் இணைக்கும்போது புதுப்புது வடிவங்கள் கிடைப்பது போல் நம் மனம் இசையின் ஏற்ற இறக்கங்களை இணைத்துப் புரிந்து கொள்வதாகத் தோன்றுகிறது. பாலுவின் எண்ண ஓட்டத்தில் அதை பார்க்கலாம் (அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும்முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?)

மோகமுள்ளில் ராஜம் ராகங்களுக்கு தனி அழகு கிடையாது, அது பாடுபவரை பொருத்தே அமையும் என விவாதிப்பார். பாபுவுக்கு ராக அமைப்பு தனி செளந்தர்யம். அதை மனதில் ஓட்டினாலே உன்மத்தமாக இருக்கும்.உணர்வுக்குவியலாக அந்த ராக ஓட்டங்களுடன் தன் எண்ணங்களை ஒட்ட வைத்துப் பேசும் சுபாவம் கொண்டவன் பாபு.இவ்விஷயத்தைப் பற்றி நிறைய விவாதிப்பார்கள்.

இதே ஒப்பீடு இக்கதையிலும் உண்டு. நடைமுறைவாதியான பாலுவுக்கு ஆலாபனை கூட புள்ளி வைத்து தெளிவான வடிவங்களாக அமையும் கோலமாகிறது. அதே ராமனுக்கு அது அழகு. கைக்குள் சிக்காத அழகுணர்வு. தோற்ற அழகில்லை. மனதளவில் கற்பனையில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் செடியான தாபம் - அதை அடக்க எந்த அழகாலும் முடியாது. அந்த தாபத்தை விளக்கலாம் - பாடல், கவிதை, ஓவியம் என பல பரிமாணங்களில். ஆனால் அந்த தாபத்தை அணைக்க முடியாது. (எனக்கு ஞானமும் மோட்சமும் ஒண்ணும் வேணாம். அழகு போரும். அழகோட வெஷம் என்னை எரிய வச்சாலும் சரி.. எனக்கு இன்னமும் அழகு வேணும். கால்வெரல் நுனி முதல் தலைமயிர் எழை வரை நெறைஞ்சிருக்கிற ஜீவனோட பேரழகு இருக்கே அது வேணும்… அழகுன்னா என்னதுன்னு இப்ப அண்ணா பாடிக்காட்டிட்டார். அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. )

கதையின் கடைசிப் பகுதி ராமனின் நீண்ட அரற்றலாக அமைந்திருக்கிறது. அதிலிருந்து எனக்குப் புரிந்தது கீழே:

இப்புலம்பல்கள் சந்திராவின் அழகு மேல் இருந்த மோகமா, உலக அழகுகள் மேலிருந்து தணியாத வேட்கையா? (வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு)
இல்லை சுத்த சங்கீத பித்தா? (அதுலே ஒவ்வொரு துளியும் சங்கீதம்னா? சுத்த சங்கீதம். காதாலே கேக்கிற சங்கீதம் இல்லே… இப்ப இந்தா அண்ணா இன்னமும் அதேதான் பாடிண்டிருக்கார்.)

காதால் கேட்கும் சங்கீதம் அல்ல. அது மனித மனதின் லயம். ஓயாத அரற்றல். தோலைத் தாண்டி வெடித்தெழும் தாபம். அதை வெளியேற்ற வழிதெரியாததே புலம்பல்களாக ராமனிடம் வெளிப்படுகிறது. வார்த்தைகளாக விரல் நுனி வழியே வெளியேறும் சங்கீதம் அதில் ஒரு பாவனை மட்டுமே. தாயார் பாதம் கதையிலும் இது வெளிப்படுகிறது.

இசை மூலம், எழுத்தின் மூலம் தன்னால்  முழுமையாக வெளிப்படுத்த இயலாத உணர்வுகளை சுப்பு ஐயர் சுலபமாக பாடல்களாகப் பாடிவிடுகிறார். கண்டிப்பாக தாபம் இல்லாமல் இல்லை. ஆனால் அதை அணைக்கும் வழி சந்திரா உட்பட யாரிடமும் இல்லை. சொல்லப்போனால், அந்த தாபம் அடங்கினால் ராமன் ஒன்றுமே கிடையாது. அந்த தாபமே அவரது படைப்பின் ஊற்று. அதில் சந்திரா போன்ற பெண்கள் நெய் போல் தூண்டுகோல்கள் மட்டுமே. அவர்களை அடைவதால் அந்த தாபம் தணியாது.

குமுறிக் குமுறி இசையாக வெளிப்படும் தாபம் சுப்பு ஐயருடையது. அது நேரடியாக ராமனின் இதயத்தை சுட்டுகிறது. தன்னால் விவரிக்க இயலாத உணர்வுகளை இப்படி அப்பட்டமாக போட்டு உடைக்கிறானே? (‘படுபாவி, அவன் கையிலே இருக்கறது நாகஸ்வரமா வேற எதுவுமா?நாசமா போக..கொல்றானே…மனுஷன மெழுகா ஆக்கிடறானே’).

அதே போல் பெண்மையின் உருவம் ராமனுக்குள் இயல்பான சலனத்தையும், பிரமிப்பையும் கலந்து உண்டாக்குகிறது. மோகமுள் பாபுவுக்கு யமுனா வெங்கலச் விக்கிரகம் என்பது போல் பெண்மைக்கு ஒரு ஆதிசக்தி இருப்பதை ராமன் குறிப்பால் உணர்த்திக்கொண்டேயிருக்கிறார். (இல்லே…திருச்செந்தூர் போகணும்னு தோணறது. ஒண்ணுமில்லே, திருச்செந்தூரிலே ஒரு மயில்கழுத்து பட்டு வாங்கி சாத்தணும்… நூத்தம்பது ரூபாயிலே கெடைக்கும்ல?’ ‘அது பாத்துக்கலாம்…யாருக்கு?’ ‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல? தெய்வானைக்குன்னா மாம்பழ நெறம்னு சொல்லுவாங்க’)

பெண்மையை சக்தி ரூபமாக, அம்பாள் வடிவமாக பல எழுத்தாளர்கள் உருவகப்படுத்தியுள்ளனர். லா.சா.ரா , தி.ஜா எனப் பலர். சக்தி ரூபத்தில் தலைகவிழ்ந்து ஆராதிப்பதும், பெண் ரூபத்தில் அடைய நினைப்பதும் ஒருங்கே நிகழ்வது தான். இக்கதையிலும் ராமனுக்கு அதுதான் நேர்கிறது. ஏதோ சந்திராவின் தாபத்துக்கு பரிகாரம் தேடுவது போல் மயில்கழுத்து பட்டு வாங்கி வள்ளிக்குச் சாத்தவேண்டும் என்கிறார்.

இசை மற்றும் தாபம் பாலுவையும் உலுக்குகிறது. எப்படி?

பாலு கைவிடப்பட்ட கருவி போல் தாபத்தை பாவிக்கிறார். இசை ஒரு கால இயந்திரம் போல் அவரை அவரது இளமைக்கு அழைத்துச் செல்கிறது(பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்தபாட்டு அடுத்து வந்தது ’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதிதிருநாள் பாட்டு).

ஆனால் தன்னுணர்வை மீட்டும் துடுப்பாக இசை பாலுவுக்கு  எடுபடவில்லை. ஒரு நடைமுறையாளன், நவீன சிந்தனையாளன் எப்படி யோசிப்பானோ அப்படி செல்கிறது அவரது சிந்தனை திரி. தாபம் என்பதை ஆண் - பெண் என்ற லெளகீக அடையாளத்திலிருந்து மானுட துயரமாக அவருக்குத் தோன்றுகிறது. என்னை கைவிட்டுவிட்டாயா? ஏன் இவ்வளவு தனிமை என கழிவிரக்கம் தொண்டை அடைக்கும் துக்கமாக மாறுகிறது. (கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார்)

இசை பற்றி எவ்வளவு எழுதினாலும் சொல்லமுடியாதவற்றிலிருந்து சொல்லமுடியாததை விவரிப்பது போலவே இருக்கும். அள்ளிப் பருகும் கையளவு தண்ணீரில் மிதக்கும் முழு நிலவு போல். களையும், உடையும்,சலசலக்கும் - ஒருபோதும் கைப்பற்ற முடியாது.

இக்கதையில் ஒரே இசையை இரு பெரும் சிந்தனை தூண்களில் ஏற்றி வைத்திருக்கிறார் ஜெமோ. சக்திரூப அன்னை ஆதிவடிவம். ஆனால் சாதாரண மனதுக்கு தாபம். மற்றொரு நோக்கில் கைவிடப்பட்ட மிருகமாக மாறிவிட்டதாக மானிடனை நினைத்து கழிவிரக்கம் தாபமாக மாறுகிறது. இரண்டிலும் தாபமே அடிப்படை உணர்வு. ஆனால் ஒவ்வொரு மனதின் இயல்புக்கு ஏற்றவாறு இசை மூலம் அத்தாபம் புதுப்புது அர்த்தங்களாக உருமாறுகிறது. இசையின் இயல்பே அதுதான்.